பெர்னாண்டஸின் ‘தனிப்பட்ட கருத்து’ ஒரு பிரச்னையே அல்ல என்கிறது பாஸ், டிஏபி

dap-pasபாஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என ஜோகூர் டிஏபி துணைத் தலைவர் நோர்மன் பெர்னாண்டஸ் கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டிருப்பது அவரது ‘சொந்தக் கருத்து’ என டிஏபி, பாஸ் தலைமைத்துவங்கள்  நிராகரித்துள்ளன.

அந்தக் கருத்து பக்காத்தான் ஒத்துழைப்பை எந்த வகையிலும் பாதிக்காது என அவை தெரிவித்தன.

“அது கட்சியின் நிலை அல்ல. அது அவருடைய தனிப்பட்ட கருத்து. எல்லா பக்காத்தான் வேட்பாளர்களுக்கும் நாங்கள் வாக்களிப்பது தான் எங்கள் நிலை,” என டிஏபி மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் அந்தோனி லோக்
கூறினார்.

பாஸ் கட்சியும் அதனை ஒப்புக் கொள்கிறது

“தனிநபருடைய கருத்துக்கள் பக்காத்தான் ஒத்துழைப்பைப் பாதிக்காது. நாங்கள் புத்ராஜெயாவை வெற்றி
கொள்ள விரும்புகிறோம். பாஸ் டிஏபி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்,” என அந்தக் கட்சியின் துணைத்
தலைவர் முகமட் சாபு பிரகடனம் செய்தார்.

அவர்கள் இருவரும் பெட்டாலிங் ஜெயாவில் பக்காத்தான் ராக்யாட் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர்  நிருபர்களிடம் பேசினர்.

ஜோகூர் பாஸ் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக வெளியான அறிக்கைகளை நிராகரித்த முகமட் சாபு,
பாஸ் உறுப்பினர்கள் பக்காத்தான் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கட்சியின் syura மன்றம்
செய்த முடிவு பொதுவானது என்றார்.

பெர்னாண்டஸுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றி டிஏபி பரிசீலிப்பதாகத் தெரிவித்த லோக், அது
பொதுத் தேர்தலுக்குப் பின்னரே செய்யப்படும் என்றார். காரணம் அது தற்போது பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி  தேர்தலில் வெற்றி காண விரும்புகிறது என அவர் குறிப்பிட்டார்.

 

TAGS: