வங்கதேச இஸ்லாமியவாத தலைவர் மீது போர்க்குற்றம் உறுதி

worldnews16713aவங்கதேசம் பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்து தனி நாடாவதற்காக நாற்பது வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்த யுத்தத்தின்போது நடந்த அட்டூழியங்களில் சம்பந்தப்பட்டிருந்தார் என மூத்த இஸ்லாமியவாத தலைவர் ஒருவர் மீது அந்நாட்டின் போர்க் குற்ற நீதிமன்றம் தற்போது குற்றத்தை உறுதிசெய்துள்ளது.

கொலை, சித்ரவதை உட்பட சுமத்தப்பட்டிருந்த ஐந்து குற்றச்சாட்டுகளிலுமே தற்போது 90 வயதாகும் குலாம் ஆஸம் மீது குற்றங்காணப்பட்டுள்ளது.

அவருக்கு 90 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸம் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். அரசியல் உள்நோக்கத்துடன் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவருடைய ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆஸம் மீதான வழக்கு விசாரணையைக் கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அவருடைய ஜமாத் இ இஸ்லமி கட்சி அழைப்புவிடுத்துள்ளது.

பாதுகாப்புப் படைகளுக்கும் இஸ்லாமியவாத ஆர்வலர்களுக்கும் இடையே தலைநகர் தாக்காவிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் ஆங்காங்கே மோதல்கள் எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1971 யுத்தத்தின்போது பாகிஸ்தானிய துருப்புகளோடு சேர்ந்து செயல்பட்டார்கள் என்று குற்றஞ்சாட்டப்படுபவர்களை விசாரிப்பதற்காக வங்கதேசத்தில் இந்த போர்க் குற்ற நீதிமன்றம் அமைக்கப்பட்டது. -BBC