சிரியாவில் ரசாயன குண்டு வீச்சு : கிளர்ச்சியாளர்கள் 1,300பேர் பலி?

SYRIA-CONFLICTடமாஸ்கஸ் : சிரியா நாட்டில், கிளர்ச்சியாளர்கள் மீது, ராணுவம், ரசாயன குண்டுகளை வீசி தாக்கியதில், 1,300பேர் பலியாகியுள்ளனர்.

சிரியா நாட்டில், அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும் படி, எதிர்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தை பதவி விலகும் படி வலியுறுத்தின. ஆனால், ஆசாத் மறுத்து விட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, இந்த நாடுகள் ஆயுத சப்ளை செய்து வருகின்றன. இதனால், சிரியாவில், ஓயாத சண்டை நடக்கிறது.

இரண்டு ஆண்டுகளாக தொடரும் இந்த சண்டையில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏழு லட்சம் பேர், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

சிரியா நாட்டுக்கு, ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.
சிரிய ராணுவத்துக்கு, ரஷ்யா, நவீன ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது.

இதனால், சிரியாவுக்கு எதிராக, ஐ.நா., பாதுகாப்பு சபையில் ஒரு மனதாக தீர்மானம் கொண்டு வர இயலவில்லை.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சிரிய ராணுவம் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக புகார் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், தலைநகர் டமாஸ்கசின், புறநகரான கவுட்டா என்ற இடத்தில், சிரிய ராணுவம், நேற்று, ரசாயன குண்டுகளை வீசியதில், 650 பேர் பலியானதாக, கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த தகவலை சிரிய அரசு மறுத்துள்ளது. “”ரசாயன குண்டுகளை வீசி, அப்பாவிகளை கொல்லும் சிரியா அரசின் நடவடிக்கைகள் குறித்து, ஐ.நா., பாதுகாப்பு சபையை உடனடியாக கூட்டி விவாதிக்க வேண்டும்,” என, சிரிய எதிர்கட்சி தலைவர் அகமது அல்-ஜார்பா கோரியுள்ளார்.

இந்த கோரிக்கையை ஏற்ற, பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹக் குறிப்பிடுகையில், “”சிரிய எதிர்கட்சிகளின் கருத்தை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவிப்போம்,” என்றார்.