ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு: 27 பேர் பலி

ஆஃப்கனின் மண்டோசாய் மாவட்டத்தில் ராணுவத் தளத்திலுள்ள கட்டடத்தில் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.

மதியம் ஒன்றரை மணிக்கு நடைபெற்ற (காபூல் நேரம்) இந்த குண்டுவெடிப்பில் 33 பேர் காயமடைந்திருப்பதாக மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் தலிப் மங்கல் கூறுகிறார்.

27 பேர் இறந்திருக்கலாம் என்றும், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கலாம் எனவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் ஆப்கானிய பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் என கொஸ்ட் மாகாணத்தில் ஆப்கானிய தேசிய இராணுவத்தின் இரண்டாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

ஆஃப்கன்
காபூலில் சமீப காலத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் இது ஒன்று.

மூன்று நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மதத் தலைவர்கள் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர், டஜன் கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. -BBC_Tamil

TAGS: