‘அணு ஆயுதம் தயாரிக்க இணையத்தில் பணம் திருடிய வடகொரியா’

தனது அணுஆயுத திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறுவதற்காக, இணைய திருட்டில் ஈடுபட்டு இரண்டு பில்லியன் டாலர்களை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 14,000 கோடி) வடகொரியா பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கிகள் மற்றும் கிரிப்டோகரன்சிகள் எனும் மின்னணு பணத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம் இரண்டு பில்லியன் டாலர்களை வடகொரியா திருடியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான 35 இணைய தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரித்து வருவதை பிபிசிக்கு கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அணுஆயுதத்தை தயாரிக்க இணைய திருட்டில் ஈடுபட்ட வடகொரியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கடந்த இரண்டு வாரங்களில் தனது நான்காவது ஏவுகணை சோதனையை நேற்று (செவ்வாய்க்கிழமை) வடகொரியா மேற்கொண்டது. அப்போது இரண்டு ஏவுகணைகள் விண்ணில் ஏவப்பட்டன.

தென்கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான கூட்டு இராணுவ பயிற்சிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே இந்த சோதனையை நடத்தியுள்ளதாக வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருநாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி, பிராந்தியத்தின் அமைதி உடன்படிக்கைகளுக்கு எதிரானது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. -BBC_Tamil

TAGS: