இது கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் பிற மாநிலங்களின் தலைநகரங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்படும் அரசு ஊழியர்கள், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை இணைய கண்காணிப்பு அமைப்பில் (Online monitoring system) உள்நுழைய வேண்டும். மேலும், அவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதை உறுதிப்படுத்த, தங்கள் சாதனங்களில் உள்ள புவிஇருப்பிட (Geolocation) செயல்பாடுகள் மூலம் வருகையைப் பதிவு செய்வதும் அவசியமாகும்.
கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு மாகாணங்களில் உள்ள அரசு ஊழியர்கள் திங்கள் முதல் புதன் வரை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.
மற்ற அரசு ஊழியர்கள் செவ்வாய் முதல் வியாழன் வரை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஏற்பாட்டிலிருந்து பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் உட்பட பல பிரிவுகள் விலக்கப்பட்டுள்ளன. கல்வித் துறையைப் பொறுத்தவரை, பள்ளி வகுப்புகளில் ஈடுபடாத அதிகாரிகள் மட்டுமே வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.
“பொது சேவைகள் வழங்குவதில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, துறைத் தலைவர்கள் அத்தியாவசிய சேவைகளைக் கண்டறிந்து, செயல்பாட்டுக்கு ஏற்றவாறு அந்தச் சேவைகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் நாட்களை ஏற்பாடு செய்ய வேண்டும்,” என்று வான் அஹ்மத் டஹ்லான் கூறினார்.
வீட்டிலிருந்து பணிபுரிபவர்களின் எதிர்பார்க்கப்படும் செயல்திறனைத் துறைத் தலைவர்கள் கண்டறிந்து, அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட செயல்திறனை அடைகிறார்களா என்பதைச் சரிபார்க்க வேண்டும் அல்லது உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
நேற்று, ஈரான் போர் சூழலுக்கு மத்தியில் எரிபொருளைச் சேமிக்கவும், நாட்டின் நிலையான எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்யவும், ஏப்ரல் 15 முதல் அரசு அமைச்சகங்கள், முகமைகள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் ‘வீட்டிலிருந்தே பணியாற்றும்’ (Work from home) முறையை அமல்படுத்தும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.
























