இராகவன் கருப்பையா – தங்களுடைய பொன்னான நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து, இரவு பகல் பாராமல் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு சர்வதேச நிலையில் நாட்டின் நற்பெயரை உயர்த்தும் விளையாட்டாளர்களுக்கு ஆக்ககரமான காப்புறுதித் திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டியத் தருணம் வந்துவிட்டது.
தங்களுடைய இளமை காலத்தின் போது விளையாட்டுத் துறையில் கோலோச்சிய எண்ணற்ற வீரர்கள் பிற்காலத்தில் திடீரென நோயுறும் போது மருத்துவ செலவுகளை சமாளிக்க இயலாமல் அவதியுறும் நிலை நமக்கு வேதனையளிக்கிறது.
ஆகக் கடைசியாக, முன்னாள் பெருநடை வீரர் சரவணன் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பது தொடர்பான செய்திகளும் படங்களும் வெளிவந்த வண்ணமாக உள்ளன.கடந்த 1998ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற 16ஆவது கொமன்வெல்த் போட்டிகளின் 50 கிலோமீட்டர் பெருநடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அவர் தற்பொழுது ‘மோட்டொர் நியூரோன் டிஸிஸ்'(Motor Neurone Disease) எனப்படும் ஒருவகை அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நரம்பியல் சிதைவு நோயானது, மூளையை கடுமையாகப் பாதித்து, தசை பலவீனத்தை ஏற்படுத்தி அசைவுகளை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி சன்னம் சன்னமாக பேச்சையும் குறைத்துவிடும்.
மலேசிய ஓட்டப்பந்தயச் சங்கம் சரவணனுக்குக் கொஞ்சம் உதவி செய்து வரும் வேளையில் விளையாட்டுத்துறை அமைச்சும் அவருக்கு உதவ முன்வந்துள்ளது.
இருந்த போதிலும் மருத்துவமனைச் செலவுகள் அளவுக்கு அதிகமாக உள்ளதால் அதனை சமாளிக்க இயலாமல் பரிதவிக்கும் குடும்பத்தினர், அவரை வீட்டிலேயே வைத்து சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளனர்.
இத்தகையோருக்கு தனிப்பட்ட காப்புறுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களுக்கென விசேஷ மருத்துவக் காப்புறுதித் திட்டம் ஒன்றை விளையாட்டுத்துறை அமைச்சு இனியாவது ஏற்பாடு செய்ய வேண்டும்.
நாட்டுக்காக வியர்வை வடிய, ரத்தம் சிந்தி, பணத்தையும் நேரத்தையும் தியாகம் செய்த இப்படிப்பட்ட வீரர்கள் அந்திம காலம் மட்டுமின்றி எந்தக் காலக்கட்டத்திலும் மருத்துவ வேதனைகளை சமாளிப்பதற்கு பணமின்றி பரிதவிக்கக் கூடாது.
இவர்களுக்கு துயர் துடைக்கும் கடப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளது. இனிமேலாவது ‘ஏனோ தானோ’ எனும் அலட்சியப் போக்கை அரசாங்கம் கைவிட வேண்டும்.’
எல்லாருக்கும் இல்லாவிட்டாலும் அனைத்துலகப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என ஏதாவதொரு பதக்கத்தைப் பெற்றிருந்தாலும் அந்த காப்புறுதித் திட்டத்தில் இடமளிக்க வகை செய்ய வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு காப்புறுதிச் சலுகை சம்பந்தப்பட்ட விளையாட்டாளருக்கு ஒரு உந்துதலாக விளங்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஒரு காப்புறுதியின் மாதாந்திர சந்தா தொகையானது, அதன் காப்பீட்டுத் தொகையில் ஏறத்தாழ 5 விழுக்காட்டுக்கும் குறைவுதான். எனவே அரசாங்கத்திற்கு அது ஒரு சுமையாகவே இருக்காது.
அப்படியே ‘பட்ஜெட்’ இல்லை என அரசாங்கம் வாதிட்டாலும், வெகுசன மக்கள் அந்த ‘நொண்டிச் சாக்கை’ ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
சுமார் 6,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஸாவில் நிகழ்ந்த போர் கிட்டதட்ட நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு தற்போது மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
ஆனால் மலேசியா மீண்டும் பெரும் செலவிலான உதவிப் பொருள்களை அங்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது சற்று வேடிக்கையாகத்தான் உள்ளது.
அருகில், நம் கண் எதிரிலேயே சரவணன் போன்ற தேசத் தியாகிகள் மருத்துவத்திற்கு பணம் போதாமல் அவதிப்படுகின்றனர் எனும் யதார்த்தத்தை அரசாங்கம் புறம்தள்ளக் கூடாது.
உள்நாட்டு மக்களின் துயர் துடைப்புக்குத் தேவையான வழிமுறைகளை அரசாங்கம் முதலில் அடையாளம் காண வேண்டும்.
























