மின்னல் தாக்குதலில் உயிரிழந்த வீரர் தொடர்பான அறிக்கைக்காக FAM காத்திருக்கிறது.

இந்த அறிக்கை நிகழ்வுகளின் காலவரிசை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்யும், மேலும் விளையாட்டு பாதுகாப்பு மேலாண்மையில் மேம்படுத்தப்பட வேண்டிய பகுதிகளைக் கண்டறியும்.

மலேசிய கால்பந்து சங்கத்தின் (FAM) பொதுச்செயலாளர் நூர் அஸ்மான் ரஹ்மான், போட்டி நடைபெறும் இடங்களில் மின்னல் கண்டறியும் அமைப்பைப் (lightning detection system) பயன்படுத்துவதை பரிசீலிக்குமாறு அமைப்பாளர்களை ஊக்குவிப்பதாகக் கூறினார்.

மலாக்காவில் நேற்று நடைபெற்ற நட்புரீதியிலான கால்பந்து போட்டியின் போது, மின்னல் தாக்கி உயிரிழந்ததாக நம்பப்படும் வீரரின் மரணம் குறித்து, மலாக்கா கால்பந்து சங்கம் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்களிடமிருந்து முழுமையான அறிக்கையை மலேசிய கால்பந்து சங்கம் (FAM) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

நிகழ்வுகளின் காலவரிசை, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்த அறிக்கை மறுஆய்வு செய்யும் என்றும், போட்டி பாதுகாப்பு மேலாண்மையில் மேம்படுத்தப்பட வேண்டிய பகுதிகளைக் கண்டறியும் என்றும் FAM பொதுச்செயலாளர் நூர் அஸ்மான் ரஹ்மான் தெரிவித்தார்.

மலாக்காவில் உள்ள பாடாங் காம்ப்ளெக்ஸ் ராகன் மூடா லெந்து மைதானத்தில், ரெம்பாவ் இந்தியன் வெட்டரன் எஃப்சி (Rembau Indian Veteran FC) மற்றும் தஞ்சோங் மின்யாக் எஃப்சி (Tanjung Minyak FC) அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற நட்புரீதியிலான போட்டியின் போது, மின்னல் தாக்கியதில் உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு FAM சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தை FAM மிக தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. இச்சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகளுக்குப் புலனாய்வு செய்ய அனைத்துத் தரப்பினரும் போதிய அவகாசம் அளிப்பார்கள் என்று நம்புகிறது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் கால்பந்து சமூகம் எப்போதும் பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்க வேண்டும் என்பதை நினைவூட்டும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், அனைத்து மாநில கால்பந்து சங்கங்கள், கிளப்புகள், அகாடமிகள் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் போட்டிகளுக்கு முன்னரும், பின்னரும், போட்டி நடக்கும் போதும் வானிலை நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் மின்னல் கண்டறிதல் அமைப்பை (lightning detection system) பயன்படுத்துவது குறித்து ஏற்பாட்டாளர்கள் பரிசீலிக்குமாறு FAM ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அமைப்பு மின்னல் செயல்பாடுகளை உடனுக்குடன் (real time) கண்டறிந்து, போட்டி அதிகாரிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்க முடியும். இதன் மூலம் அவர்கள் பாதுகாப்பு குறித்து சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்க இயலும்.

“அபாய மேலாண்மை நடைமுறைகளின் ஒரு பகுதியாக, தொழில்முறை லீக்குகள் உள்ளிட்ட பல போட்டிகளில் இந்த மின்னல் கண்டறிதல் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது,” என்று அவர் கூறினார்.