மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், முதலீட்டு முடிவுகளை எடுப்பதில் கணக்காய்வு நிறுவனங்களை மட்டுமே முழுமையாக நம்புவது சரியான அணுகுமுறை அல்ல என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்து, இந்தோனேசியாவில் செய்யப்பட்ட ஒரு முதலீட்டில் ஓய்வூதிய நிதி நிறுவனம் (Incorporated) (KWAP) கிட்டத்தட்ட ரிம 200 மில்லியன் இழப்பை சந்தித்ததைத் தொடர்ந்து வெளியிடப்பட்டது.
இரண்டு சர்வதேச கணக்காய்வு நிறுவனங்கள் அந்த முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கியதாகவும், மூன்றாவது நிறுவனம் தனது சரிபார்ப்பு பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியவில்லை என்றும் அன்வார் கூறினார்.
1MDB ஊழல் சம்பவத்தை நினைவுகூர்ந்த அன்வார், உலகளவில் மதிப்புமிக்க நிறுவனங்களாக கருதப்பட்ட கோல்ட்மேன் சாக்ஸ்(Goldman Sachs) மற்றும் ஒரு முக்கிய கணக்காய்வு நிறுவனமும் அந்த விவகாரத்தில் தொடர்புபட்டிருந்ததாக குறிப்பிட்டார்.
கணக்காய்வு நிறுவனங்களிடம் சரிபார்க்காமல் இருந்தால், ஒப்புதல் பெறுவது கடினம்.
“ஆனால் அவற்றை முழுமையாக நம்பினால், அதிலும் ஆபத்துகள் உள்ளன. இது நமக்கு ஒரு பாடமாகும்,” என்று அவர் இன்று தேவான் நெகாராவில் தெரிவித்தார்.
ஜூலை 16 அன்று, நாடாளுமன்றத்தில் அன்வார் கூறியதாவது, KWAP இந்தோனேசியாவின் மீன் வளர்ப்பு தொடக்க நிறுவனமான eFishery-யில் செய்த முதலீட்டில் இழப்பை சந்தித்தது. இந்த இழப்பு, நிறுவன நிர்வாகத்தினரால் நிதி அறிக்கைகள் கையாளப்பட்டதாகக் கூறப்படும் “திட்டமிட்ட மோசடி” காரணமாக ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் செனுக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில், முதலீட்டுக்கு முன் KWAP தனது நிர்வாக நடைமுறைகளை பின்பற்றியதாக அன்வார் கூறினார். இதில் உள்நாட்டு மதிப்பீடுகள், சுயாதீனமான ஆய்வுகள், மேலும் நிறுவனத்தின் நிதி, சட்ட மற்றும் செயல்பாட்டு நிலைமைகள் குறித்த ஆய்வுகளும் அடங்கும்.
KWAP மற்றும் பிற முதலீட்டாளர்கள் தற்போது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கி, முதலீட்டு தொகையை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், நிறுவனத்தின் உள்நாட்டு நிர்வாக முறைகளையும் வலுப்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு, eFishery நிறுவனத்தின் இணை நிறுவனர் கிப்ரான் ஹுசைஃபா, மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளுக்காக இந்தோனேசியாவின் பாண்டுங் சிறையில் ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.
MACC விசாரணை தொடக்கம்
அப்துல் ஹலீம் சுலைமான்
செனட்டர் அப்துல் ஹலிம் சுலைமானின் கேள்விக்கு பதிலளித்த அன்வார், இந்த விவகாரத்தில் ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதா என்பதை கண்டறிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) விசாரணை நடத்தி வருவதாக உறுதிப்படுத்தினார்.
முதற்கட்ட விசாரணைகளில் KWAP தரப்பில் தவறு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றாலும், எந்தவொரு விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைக்குமாறு நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார் தெரிவித்தார்.
KWAP முதலீட்டு குழுவில் தொழில்முறை நிபுணர்களும் அரசாங்க பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
“நான் நிதி அமைச்சகத்தின் பொறுப்பை ஏற்றதிலிருந்து, அரசாங்கம் எந்த விதமான தலையீடும் செய்ததில்லை”.
“மேலும் KWAP தனது முதலீட்டு முன்மொழிவுகளை அரசாங்கத்திற்கோ அல்லது நிதியமைச்சருக்கோ பரிசீலனைக்காக கொண்டு வர வேண்டிய அவசியமும் இல்லை,” என்று அவர் கூறினார்.
மேலும், KWAP-ன் செயல்பாடுகளை முழுமையாகப் பார்க்க வேண்டும் என்று பொதுமக்களிடம் அன்வார் கேட்டுக்கொண்டார். கடந்த ஆண்டு இந்த நிதி நிறுவனம் ரிம 12.9 பில்லியன் நிகர லாபத்தை பதிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
“அவர்களின் நிதி 9.3 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. இருப்பினும், அவர்கள் இன்னும் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
























