ரிம 1.097 மில்லியன் லஞ்சம் பெற்றதாக சரவணன் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை

முன்னாள் மனிதவள அமைச்சர் எம். சரவணன், 2022-ஆம் ஆண்டில் நிறுவனம் ஒன்றுக்கான வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக ரிம 1.097 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் மூன்று குற்றச்சாட்டுகளின் மீது இன்று காலை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.

TYKB Engineering Sdn Bhd நிறுவனத்தின் 1,000 வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீடுகளுக்கான விண்ணப்பத்தை, மனிதவள அமைச்சர் என்ற முறையில் அங்கீகரிப்பதற்கான தூண்டுதலாக, அவர் மூன்று தவணைகளாகப் பணத்தைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

நீதிபதி அசுரா அல்வி (Azura Alwi) முன்னிலையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-இன் பிரிவு 16(a)(B)-இன் கீழ் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்து விசாரணை கோரினார்.

குற்றப்பத்திரிகையின் விவரப்படி, அவர் ஜூன் 16 அன்று Bukit Jalil Golf & Country Resorts பணமாக ரிம 150,000 பெற்றார். மேலும், ஜூலை 7 அன்று பாங்சாரில் உள்ள ஜாலான் தெலாவியிலும் (Jalan Telawi 3) மேபேங்க் (Maybank) ஜாலான் கிள்ளான் லாமா கிளையிலும் முறையே ரிம 350,000 ரொக்கமாகவும், ரிம 597,000 காசோலை (Cheque) மூலமாகவும் பெற்றுள்ளார்.

காசோலை மூலம் பெறப்பட்ட நிதி, அதே நாளில் Big Seven Ventures Sdn Bhd நிறுவனத்தின் மேபேங்க் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Vectica Resources Sdn Bhd நிறுவனத்தின் இயக்குநர் டான் டெக் லிம் (Tan Teck Lim) சார்பாகச் செயல்பட்ட சையத் அமீருல் சையத் அகமத் (Syed Amirul Syed Ahmad) என்பவரிடமிருந்து சரவணன் இந்தப் பணத்தைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. TYKB-இன் விண்ணப்பத்திற்கு டான் ஒப்புதல் அளிப்பார் எனக் கூறப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், லஞ்சத் தொகையைப் போல் ஐந்து மடங்குக்கும் குறையாத தொகையோ அல்லதுரிம 10,000 எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்படலாம்.

வழக்கு மேலாண்மைக்கு செப்டம்பர் 29 நிர்ணயம்

துணை அரசாங்க வழக்கறிஞர் ஜூலைலா ஜமாலுதீன் (Julaila Jamaludin), நீதிமன்றம் சரவணனுக்கு ரிம 800,000 பிணைத் தொகையைக் பரிசீலிக்க வேண்டும் என்றும், அவரது கடவுச்சீட்டை (Passport) பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

வழக்கறிஞர் கீதன் ராம் வின்சென்ட் (இடமிருந்து இரண்டாமவர்)

மேலும், மஇகா துணைத் தலைவரான அவர் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அருகிலுள்ள ஊழல் தடுப்பு ஆணைய (MACC) அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், அரசுத் தரப்பு சாட்சிகளை நேரடியாகவோ அல்லது மூன்றாம் தரப்பினர் மூலமாகவோ தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் இரு கூடுதல் பிணை நிபந்தனைகளை அவர் பரிந்துரைத்தார்.

சரவணனின் வழக்கறிஞர் கீதன் ராம் வின்சென்ட் (Geethan Ram Vincent), பிணைத் தொகையைக் குறைத்து ரிம 300,000 ஆக நிர்ணயிக்குமாறு கோரிக்கை விடுத்தார். மேலும், பிரதிவாதியின் கடவுச்சீட்டைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற அரசுத் தரப்பின் பரிந்துரைக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

என் கட்சிக்காரர் நாடாளுமன்றக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால், அவர் தப்பிச் செல்லும் அபாயம் இல்லை.

தன் மீதான குற்றச்சாட்டுகளை முறியடித்துத் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்வதில் அவர் உறுதியாக இருக்கிறார். குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் தன் அர்ப்பணிப்பை நிரூபிக்கும் வகையில், MACC அழைத்ததன் பேரில் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அவருக்குக் கடவுச்சீட்டு தேவைப்படுகிறது, என்று கூறிய அவர், சரவணன் தலைமறைவாவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என்றும் சேர்த்துக் கொண்டார்.

நீதிபதி பின்னர் ஒரு பிணையாளருடன் ரிம 450,000 பிணைத் தொகைக்கு உத்தரவிட்டார். மேலும், அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை MACC அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும், அரசுத் தரப்பு சாட்சிகளுக்கு இடையூறு செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

வழக்கு மேலாண்மைக்காக நீதிமன்றம் செப்டம்பர் 29-ஆம் தேதியை நிர்ணயித்தது.

நேற்று, சரவணன் மலேசியாகினியிடம் பேசுகையில், MACC தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் “ஆதாரமற்றவை மற்றும் கற்பனையானவை” என்று பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் சில நபர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுத் தன் மீது குற்றம் சுமத்த வைக்கப்பட்டதாகவும் அவர் உரிமை கோரினார்.