கெடா உர விநியோக வழக்கில், தாம் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டிய சமூக ஊடகக் கணக்குகளின் உரிமையாளர்களுக்கு வழக்கறிஞர் அறிக்கை அனுப்புமாறு விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் முகமட் சாபு உத்தரவிட்டுள்ளார்.
மாட் சாபு என்று பரவலாக அறியப்படும் முகமட், இணையத்தில் பிரச்சினைகள் குறித்துப் பேசுவது தவறில்லை என்றும், ஆனால் ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளையும் தீங்கிழைக்கும் உள்நோக்கம் கொண்ட கருத்துகளையும் பரப்புவது தவறு என்றும் கூறினார்.
தொடர்புடைய கணக்குதாரர்களுக்கு வழக்கறிஞர் அறிக்கை அனுப்புமாறு எனது வழக்கறிஞர்களைக் கேட்டுக்கொண்டுள்ளேன். சமூக ஊடகம் என்பது அனைவரும் பேசுவதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது, ஆனால் கருத்துக்கள் பொறுப்புணர்வுடன் கூறப்பட வேண்டும், என்று அவர் தனது திரெட்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஊழல் விசாரணையில் தாம் நடவடிக்கையிலிருந்து “தப்பித்துவிட்டதாக உரிமை கோரும் முகநூல் பதிவின் ஸ்கிரீன்ஷாட் ஒன்றையும் அவர் அதில் இணைத்துள்ளார். மேலும், இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் வெறும் ஒப்பந்ததாரர்கள் மட்டுமே என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கண்டறிந்த தகவலின்படி, செப்டம்பர் மாத நிலவரப்படி, 2026 பருவத்தின் முதல் பயிர்காக கெடாவில் உள்ள சுமார் 60,000 நெல் விவசாயிகளுக்குத் தேவையான 616,015 மூடை உரங்களில், ஒரு நிறுவனம் 333,655 மூடைகளை மட்டுமே விநியோகித்துள்ளது. இதனால் 282,360 மூடைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மூடா விவசாய மேம்பாட்டு வாரியத்தின் (MADA) கீழ் உள்ள பகுதிகளில் உள்ள நெல் விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்காக, இந்த நிறுவனம் அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டது.
அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நாளை வரை தடுப்புக் காவலில் (remand) வைக்கப்பட்டுள்ளார். அதே வேளையில், இந்த விசாரணைக்கு உதவுவதற்காக முகமட் மற்றும் அவரது அமைச்சகத்தின் பொதுச்செயலாளர் ஆகியோர் அழைக்கப்படலாம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தெரிவித்துள்ளது.
அமைச்சக முகமைகள் தங்களது நிர்வாகத்தை மேம்படுத்த உத்தரவு
தனித்தனியாக, முகமட் தனது அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு அமைப்பும் சட்டப்பூர்வமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும் நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அதன் நிர்வாகத் தரத்தை உயர்த்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
பொது நலனைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு இணக்கமின்மை (விதிமீறல்), நிர்வாகக் பலவீனம் அல்லது பிரச்சினை உடனடியாகக் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என்று அவர் கூறினார்.
அமைப்புகள் மற்றும் துணை நிறுவனங்களின் நிர்வாகங்கள் தங்களின் ஒவ்வொரு முடிவும், கொள்முதலும் மற்றும் பொது நிதியின் பயன்பாடும் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-fmt
























