சிங்கள மக்களின் உறவு இல்லாமல் தமிழர்களுக்கு எதிர்காலமே இல்லை: யாழில் அமைச்சர் டியூ குணசேகர தெரிவிப்பு

dew_kunasekara_001சிங்கள மக்களின் உறவு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் என்பதே இல்லையென்று அமைச்சர் டியூ குணசேகர உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டி முன்வந்தது வரவேற்கதக்கதென்று தெரிவித்த அவர் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இந்தியாவையும் சங்கடப்பட வைத்துள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதென்று கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாடு வரவேற்கத் தக்கது. ஆனால் வடமாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனமாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது ஒரு தேர்தல் விஞ்ஞாபனம் அல்ல.

மாறாக அது ஒரு அரசியல் அறிக்கை. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமாக உள்ள அரசியல் அறிக்கை இந்திய அரசாங்கத்தையும் சங்கடப்பட வைத்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13ஆம் திருத்தத்திற்கும் அப்பால் தீர்வு என்பது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்த விஞ்ஞாபனத்தால் முடியாது. அரசியல் பிரச்சினை என்பது தேசியப் பிரச்சினையில் ஒரு பகுதியாகும்.

இன்னமும் தீர்க்கப்பட வேண்டியவையாகவும், சமரசம் செய்யப்பட வேண்டியவையாகவும் பல விடயங்கள் உள்ளன.

இவற்றைத் தீர்ப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு வாருங்கள் என்று கூட்டமைப்பிற்கு பல முறை நாம் அழைப்பு விடுத்தும் கூட்டமைப்பு இன்னமும் வரவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தெற்கிலுள்ள கடும் போக்கு சிங்களவாத அமைப்புக்கு மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கலாம். ஆனால் எமக்கு அல்ல.

கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க இந்தியாவிற்கு போகத் தேவையில்லை. தெற்கில் நாம் இருக்கின்றோம். சிங்கள மக்களின் உறவு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் என்பதே இல்லை என்றார்.

TAGS: