முல்லைத்தீவில் உச்ச வேகத்தில் நில ஆக்கிரமிப்பு! நெருக்கடியில் தமிழர்கள்

mullaitivu_land_001வடக்கு மாகாணசபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் கைப்பற்றப்பட்டதன் பின்னர், முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் நில ஆக்கிரமிப்பு உச்ச வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மக்கள், கொக்குத்தொடுவாய் கிராமத்தில் புதிதாக 2 ஆயிரம் ஏக்கர் தமிழர் நிலம் அபகரிக்கப்படுவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

2009ம் ஆண்டின் பின்னர் மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு விவசாய நிலம் சிங்கள குடியேற்றவாசிகளால் அரசாங்க ஆதரவுடன் அபகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், நடைபெற்று முடிந்த வடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் பின்னர்,மேற்படி எல்லைக் கிராமங்களில் மீதமாகவுள்ள தமிழர் நிலங்களும் மிக வேகமாக அபரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி கடந்த வாரம் முதல் கொக்குத்தொடுவாய் கிராமத்தில் 1974களில் படித்த வாலிபர்களின் விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட விவசாய நிலம், யுத்தத்தின் பின்னர் கண்ணிவெடி அபாயமுள்ள பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவை சிங்கள குடியேற்றத்திற்காக துப்புரவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதன்படி சுமார் 2ஆயிரம் ஏக்கர் நிலம் இலக்க தகடுகள் பொறிக்கப்பட்டு காடுகள் கனரக வாகனங்கள் மூலம் துப்புரவு செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சம்பவம் தொடர்பில் அறிந்து மேற்படி பிரதேசத்திற்குச் சொந்தமான தமிழ் மக்களுடன் அங்கு சென்று நிலமைகளை அவதானித்துள்ளதுடன், சம்பவத்தை உறுதிப்படுத்தியும் உள்ளார்.

அவர் கூறுகையில், கண்ணிவெடி அபாயமுள்ள பிரதேசமாக மேற்படி பிரதேசம் அறிவிக்கப்பட்டிருந்தமையினால், நிலத்திற்குச் சொந்தமான மக்கள் அங்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

மேலும் இதனால் மீள்குடியேறிய மக்கள் பலத்த வாழ்வாதார நெருக்கடியினையும் எதிர்கொண்டிருந்தார்கள். இந்நிலையில் தற்போது அவை சிங்கள குடியேற்றத்திற்காக தயார் படுத்தப்படுவதாக கூறியுள்ள அவர், கண்ணிவெடி அகற்றப்படாத பிரதேசத்தில் எவ்வாறு ஆட்கள், மற்றும் வாகனங்கள் செயற்படுகின்றன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

TAGS: