பிரிட்டன் பிரதமர் கமருனுக்கு இலங்கை ஊடக அமைச்சர் கண்டனம்! நாட்டின் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது!– அரசாங்கம்

kekaliyaaஇலங்கை ஜனாதிபதி இதைச் செய்யவேண்டும், அதைச்செய்ய வேண்டும் என்று கூற, கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமருன் அழைக்கப்படவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.

இது குறித்து இலங்கை  ஊடக அமைச்சர், கெஹெலிய ரம்புக்வெல, பிபிசியிடம் பேசுகையில்,

கமருன் பிரிட்டனில் வாழும் தமிழ்ச் சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்காகவே, விடுதலைப் புலிகளுடன் நடந்த போரின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே இலங்கை வந்திருக்கும் பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக், இலங்கைக்கு இந்த மாநாட்டுக்காக வந்து, கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகளைக் கேட்பது சரியானது என்றும், அதை கமருன் செய்வார் என்றும் கூறினார்.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமருன் நாளை வியாழக்கிழமை இலங்கை வந்து சேர்கிறார்.

நாட்டின் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது – அரசாங்கம்

நாட்டின் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நோக்கிற்காக உருவாக்கப்பட்ட இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது என நாட்டின் படைகளது சேனாதிபதியான ஜனாதிபதி அறிவித்துள்ளதாக கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

உதாரணமாக கொழும்பில் எத்தனை இராணுவ முகாம்கள் காணப்படுகின்றன.

மேல் மாகாணத்தில் உருவாக்கப்பட்ட இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரினால் பாதுகாப்பிற்கு என்ன நேரும்?

அரசியல் தேவைகளுக்காக இராணுவ முகாம்கள் அகற்றிக்கொள்ளப்பட மாட்டாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: