வடக்கில் இரவு நேரங்களில் வீடுகளுக்கு செல்லும் புலனாய்வாளர்கள்! பெண்கள் அச்சத்தில்: அடைக்கலநாதன் எம்.பி

selvam_adaikkalanathan_001வடக்கில் தமிழ் மக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக அரச படைகளின் புலனாய்வாளர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைககளை உடனடியாக தடுதது நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கில் தமிழ் மக்கள் மீதும் மனித உரிமைகள் பாதுவலர்கள் மீதும் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டு வரும் அடாவடித்தனத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனை உடன் நிறுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் உட்பட மனிதாபிமான பணியாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு புலனாய்வுப் பிரிவினர் நேரடியாகவும், தொலைபேசியூடாகவும் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர்.

குறிப்பாக காணாமல் போன உறவுகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு இப்படியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலைமை தொடர்ந்து வருகிறது. இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்தால் உரிய முறையில் விசாரனைகளை பொலிஸார் மேற்கொள்வதில்லை.

இதனால் காணாமல் போன உறவுகளுக்காக மேற்கொண்டு வரும் அமைதியான போராட்டங்களை கூட கைவிட வேண்டிய நிலைமைகள் ஏற்படுகின்றன. மேலும் புலனாய்வாளர்கள் இரவு நேரங்களிலே விசாரணைகளுக்காக மக்களின் வீடுகளுக்கு செல்லுகின்றனர்.

இதனால் பெண்கள் பாரிய அச்சத்தை எதிர் நோக்கி வருகின்றனர். விசாரணைக்காக வீடுகளுக்குச் செல்லுகின்ற போது பெண் பொலிஸாரை அழைத்துச் செல்வதில்லை.

பெண்களை ஆண் புலனாய்வாளர்கள் விசாரணை செய்கின்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டே செல்லுகின்றன.

விசாரணை செய்ய செல்லும் புலனாய்வாளர்கள் யார் என்று அடையாளம் காணமுடியாத நிலைமை உள்ளது. இவர்கள் சீருடை அணிந்து விசாரணைகளுக்கு செல்வதில்லை. அரச புலனாய்வாளர்கள் என்று கூறி விசாரணை செய்கின்றனர்.

எனவே வடமாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள் மீதும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மீதும் புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர்கள் மீதான இந்த சம்பவங்களுக்கு அரசே உரிய பதிலை கூறி இவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விடையத்தில் சர்வதேச சமூகம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: