மக்களின் உணர்ச்சிகளை அடக்க முற்பட்டால் தாக்கம் மிக மோசமாக இருக்கும்: அரசாங்கத்திற்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை!

vikneshwaran_002எமது மக்களின் உணர்சிகளை இராணுவப் பலத்தின் மூலமாகவோ அல்லது வன்முறைகள் மூலமாகவோ அடக்க முற்பட்டால் அதன் தாக்கம் மிகமோசமாக இருக்கும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மரநடுகை விழாவில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது இனத்தின் பல இளைஞர் யுவதிகள் எங்களை விட்டுப்போய் விட்டார்கள். இதனால் எமது இளைஞர் சமுதாயத்தில் ஒரு மேம்பாடு வரவேண்டும் இதனை எடுத்துக்காட்டும் முகமாக இந்த மரநடுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மரங்கள் நடுவதன் மூலம் சுற்றுச் சூழலில் ஒரு மாற்றம் ஏற்படும் அதனைப் போலவே எங்கள் வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்பட ஒரு அங்கமாக இந்த மரங்களை நாங்கள் நடுகின்றோம்.

வடமாகாணத்தில் உள்ள ஏ-9 வீதியில் இருந்த அத்தனை மரங்களும் போய்விட்டது நல்ல காடுகளாய் இருந்த இடமெல்லாம் வெறும் தரைகளாக மாறிவிட்டது. எது எங்கே போனது. எப்படி போனது என்று தெரியவில்லை. சர்வதேச விசாரணை நடத்தினால் எல்லாமே தெரியவரும்.

எங்கள் பிரதேசங்களில் புதிய மரங்களின் தேவைப்பாடுகள் இருக்கிறது அந்த மரங்களை நாங்கள் திரும்பவும் வரவழைக்க வேண்டும் வளரவிட வேண்டும் அதே போன்று தான் எங்கள் வாழ்விலும் புதிய சமுதாயம் மேம்பட வேண்டும்.

எங்கள் காணிகளிலோ தனிநபர்களின் காணிகளிலோ மரங்கள் நடுகை செய்வதை எந்த அரசாங்கத்தினாலேயோ தடைசெய்ய முடியாது. இன்று நாங்கள் பல இடங்களில் மரங்களை நடுகை செய்திருக்கின்றோம் எனது வீட்டிலும் இன்று நான் ஒரு மரத்தை நட்டிருக்கின்றேன். இது எங்கள் மனத்தைப் பொறுத்தது உணர்ச்சிகளைப் பொறுத்தது.

இறந்த ஆத்மாக்களின் அத்மா சாந்திக்காகவும் புதிய உலகிற்கு எங்களை கொண்டு செல்லவும் ஒரு அடையாளமாக இந்த மரநடுகை அமைந்துள்ளது. இதனை செய்ய வேண்டாம் என்று அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது இதனை அரசாங்கம் குறுகிய நோக்கத்துடனேயே பார்க்கிறது.

எமது மக்களின் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் முகமாக இவ்வாறான நடவடிக்கைகளை செய்ய விடாமல் இராணுவத்தின் ஊடாக பலாத்காரத்தின் ஊடாக அல்லது வன்முறையூடாக தடுத்தால் இதனுடைய தாக்கம் மிகமோசமாக இருக்கும் என்பதை அரசாங்கம் கணக்கில் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

TAGS: