ரஷியாவுக்கு எதிராக தயார் நிலையில் புதிய பொருளாதாரத் தடை: ஒபாமா

obamaஉக்ரைன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் செயல்பட்டு வரும் ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை தயார் நிலையில் உள்ளது என்றும், அதை அமல்படுத்துவதற்கு நட்பு நாடுகளின் ஆதரவு தேவை என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

தனது ஆசிய பயணத்தின் முதல்கட்டமாக ஜப்பான் வந்துள்ள அதிபர் ஒபாமா, அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபேவுடன் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:

ரஷியா மீதான பொருளாதாரத் தடைக்குத் தேவையான ஆதரவு கிடைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன். கிழக்கு உக்ரைனில் பதற்றத்தை தணிப்பதற்காக, கடந்த வாரம் ஜெனீவாவில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரஷியா பின்பற்றவில்லை.

ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மூலம் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துவரும் நடவடிக்கைகளில் இருந்தும் அந்நாடு பின்வாங்கவில்லை என்று ஒபாமா கூறினார்.

உக்ரைனில் ரஷியாவுக்கு ஆதரவான பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ள நிலையில் ஒபாமா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

“ஜப்பானுக்கு ஆதரவு’: இந்தச் சந்திப்பின்போது, கிழக்குச் சீன கடற்பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய தீவுக்கூட்டங்கள் தொடர்பாக சீனா-ஜப்பான் இடையே நிலவும் பிரச்னை குறித்து ஒபாமா கூறியதாவது:

சர்ச்சைக்குரிய அந்த தீவுக் கூட்டங்கள், வரலாற்று ரீதியாக ஜப்பான் ஆளுகையின் கீழ் இருந்துள்ளன. இப்பிரச்னை தொடர்பாக ஜப்பானுக்கு எதிராக ராணுவ அச்சுறுத்தல் எழும் பட்சத்தில், அந்நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி ஜப்பானுக்கு ஆதரவாகவே அமெரிக்கா செயல்படும்.

இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக முடிவெடுப்பதை அனுமதிக்க முடியாது. எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் இதற்கு தீர்வு காண முயல வேண்டும் என்று ஒபாமா கூறினார்.