ஈச்சிலம்பற்றில் சிறிலங்காப் படையினர் சுற்றிவளைப்புத் தேடுதல்

Army-theduthal-300x169திருகோணமலை இலங்கைத் துறைமுகத்துவாரம் பகுதியில், நேற்று துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக கூறி, சிறிலங்கா படையினர் அங்கு இன்று அதிகாலை தொடக்கம் சுற்றிவளைப்புத் தேடுதல்களை நடத்தி வருகின்றனர். இலங்கைத் துறைமுகத்துவார கடற்படைத் தளத்துக்கு அருகே நேற்று சிறிலங்கா கடற்படையினரால் ரி-56 ரகத் துப்பாக்கி ஒன்றும் ரவைகளும் கைப்பற்றப்பட்ட நிலையிலேயே ஈச்சிலம்பற்றுப் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவம் கடற்படை, மற்றும் காவல்துறை இணைந்து தேடுதல்கள் மற்றும் விசாரணைகளை நடத்தி வருவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் கடற்படைத் தளத்துக்கு அருகே நடமாடிய இரண்டு இளைஞர்கள் விசாரிக்க முயன்ற போது, அவர்கள் ஆயுதப்பொதியை போட்டுவிட்டுத் தப்பிச் சென்றதாகவும் அவர்களைப் பிடிக்கவே தேடுதல்கள் நடத்தப்படுவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இன்று அதிகாலை ஈச்சிலம்பற்று மற்றும் அதையண்டிய பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் சிறிலங்கா படையினரால் விசாரணைக்குட்பட்டுத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

TAGS: