சர்வதேச விசாரணை இல்லை ஆனால் ஏனையவை நிறைவேற்றப்படும்

rajapaksa1ஐநாவின் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள சர்வதேச விசாரணை என்ற விடயத்தை தவிர ஏனைய அனைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்த இலங்கை தயாராக இருப்பதாக இலங்கை வந்த ஜப்பானிய நாடாளுமன்ற வெளிவிவகார துணை அமைச்சர் செய்ஜி கிஹரா அவர்களிடம் இலங்கை ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிபிசியிடம் பேசுகையில், சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதை விடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு வின் பரிந்துரைகளுக்கு அமைய இலங்கை சர்வதேச விசாரணை உட்பட அனைத்து விடயங்களையும் அமல்படுத்த வேண்டும் என்று பிரிட்டன் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பிரிட்டனின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தின் துணை அமைச்சரான கியூகோ ஸ்வயர் அவர்கள் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இதனைக் கூறியுள்ளார். -BBC

TAGS: