ஐ.நா விசாரணைக்குழு இந்த வாரம் அறிவிப்பு! ஆய்வு நடைபெறுகிறது- இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?

navaneetham-pillai1இலங்கையில் நடந்த போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான குழுவை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் இன்னமும் நியமிக்கவில்லை.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் இந்த விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் தொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும், கடந்த வாரம் பலரது பெயர்கள் ஆராயப்பட்டதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், இலங்கை அரசாங்கத்துக்கு, இன்னமும் இந்த விசாரணைக் குழுவின் நியமனம் குறித்து அறிவிக்கப்படவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது கூட்டத்தொடர் அடுத்தவாரம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில், இந்த விசாரணைக்குழு பற்றிய அறிவிப்பு இந்த வாரம் அல்லது அடுத்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், வரும் 10ம் நாள் உரையாற்றவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை குறித்து கருத்து வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் தமது உரையில் விசாரணைக்குழுவின் நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டதுடன்,இலங்கை அரசாங்கம் அதனை முறியடிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கவுள்ளது.

போர்க்குற்ற விசாரணைக் குழு தொடர்பில் இந்திய புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் சர்வதேச குழு இந்த வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனினும் அந்தக்குழுவில் இடம்பெறுவோரின் இறுதிவடிவம் இன்று தயாரிக்கப்படவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்தக்குழுவில் இணைத்துக் கொள்ளப்படுவோரின் பெயர்கள் தொடர்ந்தும் பரிந்துரை மற்றும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் இந்தக்குழுவின் இறுதி வடிவத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.

அத்துடன் இலங்கை அரசாங்கத்துக்கும் இது அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் போர்க்குற்ற சர்வதேச விசாரணைக்குழு தொடர்பில் இந்திய புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து இன்னும் தெளிவாகவில்லை என்று இலங்கை அரசாங்க தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

TAGS: