தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்: ஈராக் எல்லைப்பகுதியில் குவிக்கப்படும் சவுதி படைவீரர்கள்

iraq_forces_001ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடும் சண்டை நடத்தி வருகின்றனர்.இதன்போது ஈராக்கின் முக்கிய நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மந்திரலோசனை நடத்தி வருகின்றன.

இந்நிலையில்  தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஈராக் அதிகாரப்பூர்வமாக கேட்டுக்கொண்டும், அமெரிக்கா இன்னும் ராணுவ நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாவை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

கடந்த வாரம், தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடிக்க மன்னர் அப்துல்லா சபதம் செய்திருந்த நிலையில் இந்த தொலைபேசி பேச்சு நடந்துள்ளது.

ஈராக்கில் தீவிரவாதிகள் கை ஓங்கி வருவது பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர். மேலும், ஈராக்கில் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக சவூதி அரேபியா 500 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதாக அறிவித்திருப்பதற்கு ஒபாமா நன்றி தெரிவித்ததாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, ஈராக் எல்லையில் சவூதி அரேபியா 30 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளது. ஈராக் தனது படைகளை அங்கிருந்து திரும்பப்பெற்ற நிலையில், சவூதி அரேபியா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது

தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.