சிறார் மத மாற்றம்: பக்கத்தான் குரல் எங்கே?, குடைகிறார் அம்பிகா

Ambiga grills pakatanஒருதலைப்பட்ச சிறார் மத மாற்ற விவகாரத்தில் பக்கத்தான் நிலைப்பாடு பலவீனமாக காணப்படுவதால் அக்கூட்டணியை மூத்த வழக்குரைஞர் அம்பிகா சாடினார்.

“இப்பிரச்சனை ஒருதலைப்பட்சமான சிறார் மத மாற்றம் சம்பந்தப்பட்டது. இது சிறார்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இந்த விவகாரத்தில் பக்கத்தான் ஒரு வலுவான நிலைப்பாட்டை காட்டவில்லை”, என்று எதிரணித் தலைவர் அன்வாரின் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் அம்பிகா கூறினார்.

முன்னதாக இதே நிகழ்ச்சியில் இவ்விவகாரம் பற்றி அன்வார் இப்ராகிம் பேசியிருந்ததை குறிப்பிட்டு பேசிய அம்பிகா இது போன்ற மத மாற்றங்களைத் தடுப்பதற்கு பக்கத்தான் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர முனைப்புக் காட்ட வேண்டும் என்றார்.

“நாம் ஏன் அந்த சட்டத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை (தற்போதைய சட்டத்தை திருத்துவதற்கு)?

“எப்போதும் பக்கத்தானும் அரசாங்கமும் அற்பவிசயங்களுக்கெல்லாம் சச்சரவில் ஈடுபடுகின்றனர். ஆனால், நமக்கு இதன் மீது விளக்கம் வேண்டும்.

“இந்த விவகாரத்தில் பக்கத்தான் ஒரு வலுவான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் என்று நம்புகிறோம், ஏனென்றால் மக்கள் அவதிப்படுகின்றனர்”, என்றார் அம்பிகா.