அனாவசிய அண்டிபயாடிக்: மக்களின் உடல்நலம் பாதிப்பதாக புதிய ஆய்வு காட்டுகிறது

antibioticதொற்றுநோய்க் கட்டுப்பாட்டு மருந்துகளான அண்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு உலகில் அதிகரித்துவருவதாக அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் செய்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

2000 – 2010 காலகட்டத்தில் உலகில் அண்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு 36 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என்றும், இதில் முக்கால்வாசிக்கு காரணம் இந்தியா, சீனா, பிரசில், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகள்தான் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

அனாவசியமாக அண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு அவர்களது உடல்நலம் கெடுகிறது என்றும், மருந்துக்கு கட்டுப்படாத புதிய நோய்க் கிருமிகளும் பெருகுகின்றன என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது.

ஐரோப்பாவைப் பொறுத்தவரையில், மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளபடியால், அண்டிபயாடிக் பயன்பாடு குறைந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.