298 பேருடன் மலேஷிய விமானம் யுக்ரெய்னில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

 

மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் (ஆவணப்படம்)மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் (ஆவணப்படம்)

 

மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று யுக்ரெய்னில் விழுந்து நொறுங்கியிருக்கிறது. அந்த விமானத்தில் 298 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த வழியில் இப்படி நடந்திருக்கிறது.

தனது விமானத்துடனான (எண் எம்எச்17) தகவல்தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டதாக மலேஷியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடைசியாக அந்த விமானத்துடனான தகவல் தொடர்பு என்பது அந்த விமானம் யுக்ரெய்ன் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோதுதான் இருந்தது என்று மலேஷியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறது.

யுக்ரெய்னுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் கிழக்கு யுக்ரெய்னில் இந்த விமானம் தரையில் எரிந்ததை கண்டதாக மாஸ்கோவில் இருக்கும் வான்வழி கண்காணிப்பு அதிகாரி ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது. அந்த குறிப்பிட்ட விமானம் ரஷ்ய வான்பறப்பிற்குள் நுழையவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த விமானம் சுமார் 33,000 அடி உயரத்தில் ஏவுகணை மூலம் தாக்குதலுக்கு உள்ளானதாக யுக்ரெய்னின் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் ஆண்டன் ஹெரஷெங்கோ தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது.

யுக்ரெய்ன் கிளர்ச்சியாளர்கள் காரணமா?

கிழக்கு யுக்ரெய்னில் யுக்ரெய்ன் ராணுவ விமானங்கள் ஏவுகணைதாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்த பிராந்தியத்தில் தான் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள் யுக்ரெய்னிய அரசை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து தமக்கு தெரியவந்திருப்பதாக கூறும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம், என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்துவருவதாகவும் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக யுக்ரெயின் அரசு ரஷ்யா தனது போர் விமானங்களில் ஒன்றை, அது யுக்ரெயின் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, சுட்டு வீழ்த்திவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தது.

யுக்ரெய்னிய ராணுவத்துக்கு சொந்தமான எஸ்.யு 25 ரக விமானம் ஒன்று புதனன்று ரஷ்ய ஏவுகணை ஒன்றால் தாக்கப்பட்டதாகவும், ஆனால் விமானி வெளியே குதித்து விட்டார் என்றும், அவர் காயமின்றி மீட்கப்பட்டார் என்றும் யுக்ரெய்னிய பாதுகாப்பு அமைச்சகத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் கூறினார்.

யுக்ரெய்ன் கிளர்ச்சியாளர்கள் (ஆவணப்படம்)யுக்ரெய்ன் கிளர்ச்சியாளர்கள் (ஆவணப்படம்)

ரஷ்ய நிலப்பரப்பிலிருந்து ஒரு யுக்ரெயினிய கிராமம் ஒன்றில் க்ராட் ரக ராக்கெட்டுகள் ஏவப்படுவது போல காட்டும் amateur வீடியோ காட்சிகளை யுக்ரெயினிய ஊடகங்கள் காட்டின.

இந்த காட்சிகளை பிபிசியால் முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை.

கிழக்கு யுக்ரெயினில் பிரிவினைவாதிகளுக்குத் தான் உதவி செய்வதாகக் கூறப்படுவதை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறது.

10,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தை எதனால் சுட்டு வீழ்த்த முடியும்?

இதேவேளை 10,000 அடி உயரத்தில் பறக்கும் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தவேண்டுமானால் அது தொலைதூரம் பறக்கவல்ல நிலத்தில் இருந்து வான்வெளிக்கு ஏவக்கூடிய நீண்டதூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணையால் மட்டுமே சாத்தியம் என்றும், அதுவும் கூட அத்தகைய ஏவுகணை ராடார் உதவியுடன் வழிநடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் பாதுகாப்புத்துறை நிபுணர் ஒருவர் பிபிசியிடம் தெவித்தார்.

அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இந்த விமானமானது மனிதர்கள் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய மேன்பேட் என்கிற ஏவுகணைத்தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்காது என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அத்தகைய குறுகிய தூர ஏவுகணையின் வீச்சு விமானம் பறந்துகொண்டிருந்த உயரத்த்க்கு செல்லாது என்று மதிப்பிடப்படுகிறது.

இவை தவிர வானிலிருந்தபடியே ஏவப்பட்டு தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஏற்றிச் சென்ற ராணுவ தாக்குதல் விமானத்தினால் மட்டுமே இந்த விமானம் தாக்கப்பட்டிருக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இதில் எந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கிறது அல்லது எப்படி இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது என்பதை அமெரிக்காவின் வசம் இருக்கும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் கண்டறிய முடியும் என்று நம்பப்படுகிறது.

நிலத்தில் இருந்து வான் நோக்கிச் சென்று தொலைதூர தாக்குதல் நடத்தப்படும்போது அத்தகைய ஏவுகணைகள் வெளி உமிழும் புற ஊதாநிற புகையை இந்த செயற்கைக்கோள்களின் படங்கள் காட்டிக்கொடுக்கும் என்று கருதப்படுகிறது. -BBC

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் ராணுவமா? கிளர்ச்சியாளர்களா?

கோலாலம்பூர் : மலேசிய ஏர்லைன்சிற்கு சொந்தமான எம்.ஹச்.17 பயணிகள் விமானம், ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது உறுதியாகி உள்ள நிலையில் அதனை தாக்கியது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. ராணுவத்திற்கு சொந்தமானது என நினைத்து கிளர்ச்சியாளர்கள் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என உக்ரைன் ராணுவத்தினரும், ராணுவத்தினர் தான் சுட்டு வீழ்த்தினர் என கிளர்ச்சியாளர்களும் மாறி மாறி குற்றம்சாட்டி உள்ளது குழப்பத்தை அதிகரிக்க செய்துள்ளது.

விமான விபத்து : மலேசிய ஏர்லைன்சிற்கு சொந்தமான 777 போரிங் ரக எம்.ஹச்.17 பயணிகள் விமானம், நேற்று மாலை நெதர்லாந்தில் இருந்து கோலாலம்பூரிற்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானம் ரஷ்ய எல்லையை கடந்த போது கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள், ஊழியர்கள் உள்ளிட்ட 298 பேரும் உடல் கருகி பலியாகினர். இவர்களில் 154 பேர் டச்சுக்கார்கள் எனவும், 43 பேர் மலேசியர்கள் எனவும், 35 பேர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் மலேசிய விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் 41 பேர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் ஏதும் தெரியவில்லை.விமானத்தில் குழந்தைகள் சிலரும், அமெரிக்கர்கள் 23 பேரும் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான இடத்தில் நூற்றுக்கணக்கான உடல்கள் சிதறி கடக்கின்றன. உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

தாக்கியது யார் : விபத்திற்குள்ளான விமானத்தை பயங்கரவாதிகள் வெடித்துச் செய்ததாகவோ அச்சுறுத்தலோ அல்லது மர்ம உரையாடல்கள் ஏதும் இல்லை என மலேசிய விமான நிலைய நிர்வாகம் உறுதி செய்துள்ளது. ரஷ்ய எல்லை அருகே வந்த போது தான் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் என நினைத்து கிளர்ச்சியாளர்கள் தான் அதனை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் ரேடார் எல்லையை கடந்து 10,000 மீட்டர்களுக்கு பிறகே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், உக்ரைன் ராணுவத்தினர் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டு தங்கள் மீது பழி போடுவதாக கிளர்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர். இதனால் விமானத்தை சுட்டது யார், 298 உயிர்கள் பலியாக காரணமானவர்கள் யார் என்ற குழப்பம் அதிகரித்துள்ளது.

விசாரணைக்கு உத்தரவு : விமான விபத்து குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார். விபத்திற்கான காரணம் குறித்து கண்டறிய தேசிய பாதுகாப்பு குழுவின் உதவியை தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மலேசிய மற்றும் ரஷ்ய பிரதமர்களை அழைத்தும் ஒபாமா ஆலோசனை நடத்தி உள்ளார். ஏவுகணை வீசியே விமானம் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் விபத்து நடந்த வழிதடத்தை பயன்படுத்த வேண்டாம் என விமான நிறுவனங்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.

ஆபத்தை தவிர்த்த மோடி விமானம்: ஆம்ஸ்டர்டாமில் இருந்து வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ரஷ்ய எல்லையில், உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், 280 பயணிகள், 15 ஊழியர்கள் பலியாகி உள்ளனர். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு ஜெர்மன் வழியாக பிரதமர் நரேந்திரமோடி நாடு திரும்பும்போது, மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பாதையில்தான் வருவதாக இருந்தது. இருப்பினும் ஜெர்மனியிலிருந்து மோடி விமானம் புறப்படும் முன், இந்த தகவல் கிடைதத்தால், மாற்றுப்பாதையில் இந்தியா வந்தது அவருடைய விமானம். மேலும், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நேரத்தில், அந்த இடத்தில் இருந்து 25 கி.மீ., தொலைவில் ஏர் இந்தியா விமானமும், அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமும் வந்து கொண்டிருந்தன என்றும், அதிர்ஷ்டவசமாக இந்த இரு விமானங்களும் தப்பி உள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.