இந்திய இலங்கை உறவுகளை மேலும் பலப்படுத்துவற்கு பணியாற்றுவோம்!! மோடி மற்றும் ராஜபக்ச இடையே இணக்கம்!!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாகப் பணியாற்றுவதற்கு சிறீலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இணக்கம் கண்டுள்ளனர்.

சந்திப்பான நேற்று சனிக்கிழமை நியுயோர்க்கில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில்:

சுமூகமாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், இரு நாடுகளுக்கும் பொதுவான பல்வேறு விடயங்கள் குறித்து இரண்டு தலைவர்களும் உரையாடினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான அண்மைய சந்திப்பு சம்பந்தமாக பிரதமர் மோடி தெரிவிக்கும்போது, குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக  ராஜபக்ஷவிற்குத் தகவலளித்தார். அந்த சந்தர்ப்பத்தில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் எப்போதும் தயாராகவே இருப்பதாக பிரதமர் மோடியிடம் ராஜபக்ஷ விளக்கினார். அத்தோடு அதற்கான பொறிமுறையானது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினூடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

வட மாகாணத்திற்கு அரசாங்கம் உதவி வரும் வழிகள், குறிப்பாக நிதியியல் வளங்கள் 1.5 பில்லியன் ரூபாய் தொகை இவ்வாண்டு வரவு – செலவுத் திட்டத்தினூடாக கிடைக்கப்பெறச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக பிரதமருக்கு, மகிந்த ராஜபக்ச விளக்கினார்.

மீனவர் விவகார விடயங்கள் கவனமாகக் கையாளப்பட வேண்டும் என இரண்டு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். அடிக்கடல் மீன்பிடிப்பு நடைமுறை தொடர்பான தனது கவனத்தை ராஜபக்ஷ மீள வலியுறுத்தினார்.  இதன்போது, ‘அடிக்கடல் மீன்பிடி தான் மிகப்பெரிய பிரச்சினை’ எனத் தெரிவித்தார்.’தற்போது அது சட்டரீதியற்ற நடைமுறை. இலங்கை மீனவர்களுக்கு நாங்கள் அடிக்கடல் மீன்பிடிப்பைத் தடை செய்துள்ளோம். இது கடற்படுக்கைகளுக்கும், வளங்களுக்கும் நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்துகிறது.இலங்கையிலுள்ள மீனவர்களுக்கு அடிக்கடல் மீன்பிடிப்பு நுட்பம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய மீனவர்களுக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டால் அதை வடக்கிலுள்ள இலங்கை மீனவர்கள் அநீதியாக நோக்குகிறார்கள்’ என மகிந்த விளக்கமளித்தார்.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இந்தியாவின் ஆதரவுக்கும் ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களுக்கும் பிரதமருக்கு ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.’நாங்கள் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும், ஆகவே ஒருவருக்கொருவர் உதவவேண்டும்’ என பிரதமர் மோடி பதிலளித்தார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், வடிகாலமைப்பு மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷெனுகா செனவிரத்ன, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி நிரந்தரப் பிரதிநிதி மேஜர். ஜெனரல். ஷவேந்திர சில்வா ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

TAGS: