ஜெயலிதாவை விமர்சனம் செய்ய இங்கே எவருக்கும் யோக்கியதை இல்லை!- மனோ கணேசன்

manoGaneshanஅதிமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலிதாவை விமர்சனம் செய்ய இங்கே எந்த ஒரு அரசியல்வாதிக்கும் யோக்கியதை இல்லை. குறிப்பாக ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு கொஞ்சமும் அருகதை இல்லை. என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஊழல், குடும்ப ஆட்சி, வீண் விரயம், அதிகார துஷ்பிரயோகம், எதிரணியினர் மீது வன்முறை, ஊடக அடக்கு முறை, மனித உரிமை மீறல், சட்ட ஆட்சி இன்மை, சொந்த வயிற்றுப்பாடு தேவைக்காக சொந்த மக்களையே விற்று சாப்பிடும் அரசியல் ஆகியவற்றில் உலக சாதனை செய்துள்ள இந்த வெட்கங்கெட்ட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு கொஞ்சமும் அருகதை இல்லை.

அதிமுக தலைவர் ஜெயலிதாவை பார்த்து எள்ளி நகையாடவும், சாபமிடவும் இங்கே உள்ள சில அரசாங்க எலிகள் கிளம்பியுள்ளதை பார்க்கும் போது விசித்திரமாக இருக்கின்றது.

ஜெயலலிதா எட்டு கோடி மக்களின் முதலமைச்சர் என்பதையும், தமிழக மக்களின் அறுதி பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ள, இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவர் என்பதையும் இந்த எலிகளுக்கு நான் ஞாபகமூட்டுகின்றேன்.

முன்னாள் தமிழக முதல்வர் தவறு இழைத்துள்ளாரா, இல்லையா என்பது பற்றி இந்திய நீதித்துறை தீர்மானிக்கட்டும். நீதித்துறைக்கு முகங்கொடுக்க அதிமுக சட்டப்பிரிவு, பிரபல இந்திய சட்ட அறிஞர் ராம் ஜெத்மலானி தலைமையில் அணி திரண்டுள்ளது. அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

உலகம் ஒரு மத பயங்கரவாதியாக அடையாளம் கண்டுள்ள சர்ச்சைக்குரிய மியான்மார் நாட்டு மத தலைவர் விராது தேரரை இன்று இந்த நாட்டுக்குள்ளே சர்வ மரியாதைகளுடன் அழைத்து வருகிறீர்கள்.

இந்த நாட்டின் பொதுபல சேனை அடிப்படைவாத அமைப்பு, விராது தேரரின் 969 என்ற அடிப்படைவாத அமைப்புடன் ஒப்பந்தம் செய்து, ஆவணங்களை பரிமாறிக் கொள்கின்றது.

அந்த மாநாட்டில் பல இனங்கள் வாழும் இலங்கையின் பன்மை தன்மையை குழப்பி விடும் முகமாக, இலங்கையின் பெயரை சிங்ஹலே என மாற்றவேண்டும் என்றும், இங்கு வாழும் மக்களை சிங்ஹல–பெளத்தர்கள், சிங்ஹல-தமிழர்கள், சிங்ஹல-இந்துகள், சிங்ஹல-முஸ்லிம்கள், சிங்ஹல-கிறிஸ்தவர்கள் என அழைக்க வேண்டும் என்றும், தேசியக்கொடியை இன்னமும் சிங்கள பெளத்த மயமாக்க வேண்டும் எனவும் கருத்துகள் கூறப்படுகின்றன.

வெளிநாட்டு விராது தேரின் ஆலோசனைகளின்படி நமது நாட்டில் நடைபெறும் இவை அரசாங்கத்தின் கண்களுக்கு சட்டமீறல்களாக, குற்றங்களாக தெரியவில்லை. ஆனால், வெளிநாட்டு அரசியல் தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலிதா தொடர்பில் அவரது நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் குற்றங்களாக அரசாங்கத்தின் கூட்டு கட்சிகள் சிலவற்றுக்கு தெரிகின்றன.

எனவே ஜெயலலிதா பற்றி அவசரப்பட்டு தெரிவிக்கப்படும் அரைவேக்காட்டு கருத்துகளை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இலங்கை நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை. இலங்கை மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்தார் என குற்றஞ்சாட்டப்படவில்லை.

எனவே அவரைப்பற்றி கருத்து கூறுமுன் இவர்கள் தங்களை திருத்தி கொள்ள வேண்டும். மாநிலத்திலும், தேசிய ரீதியாகவும் பலமான ஒரு அரசியல் தலைவரையும் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் இந்திய நீதித்துறையை பார்த்து பாடம் படிக்க வேண்டும்.

இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தலை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிமுக தலைவர் ஜெயலலிதா தனது ஆட்சிகாலத்தில் இலங்கை தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்திருந்தார். இதுவே இவர்களது கோபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

அதிமுக தலைவர் ஜெயலலிதா அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். இந்த எதிர்பார்ப்பு நல்ல எண்ணம் கொண்டது இல்லை.

இங்கே வாழும் தமிழருக்காக அதிகாரத்துடன் குரல் கொடுக்கும் எந்த ஒரு சக்தியும் எந்த ஒரு நாட்டிலும் , குறிப்பாக தமிழகத்தில் இருக்க கூடாது என்ற எண்ணமே அரசாங்கத்திற்கு உள்ளே நிலவுகின்றது.

TAGS: