மாயமான மாணவர்களை கொன்று குவித்தோம்: மெக்ஸிகோ கடத்தல் கும்பல் ஒப்புதல்

missing_students_001மெக்சிகோவில் மாயமான 43 மாணவர்களை கடத்திய போதைப் பொருள் கடத்தல் கும்பல் அவர்களை கொன்று குவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மெக்சிகோவின் கியூரெரோ மாகாணத்தில், அயாட்ஜினப்பா என்ற இடத்தில் இயங்கி வரும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்றின் மாணவர்கள் சிலர், பாரபட்சமான பணி அமர்த்தல் பிரச்சினையை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து அதற்காக நன்கொடை திரட்ட கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி இகுவாலா நகருக்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகியதோடு, 43 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.

இந்த விவகாரத்தில், இகுவாலா நகர மேயருக்கும், அவரது மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உள்ளூரில் போதைப்பொருள் கடத்தல்களுக்கு மேயரின் மனைவி துணை போனதாகவும், அதற்கு இந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பழி வாங்கும் விதத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து மேயர் ஜோஸ் லூயிஸ் அபர்கா, அவரது மனைவி மரியா டி லோஸ் ஏஞ்சல்ஸ் பினிடா, போதைப்பொருள் கடத்தல் கும்பலினர் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாயமான மாணவர்களை பொலிசார் எங்களிடம் ஒப்படைத்தனர். அவர்களில் சிலர் ஏற்கனவே மூச்சு திணறடித்து கொல்லப்பட்டிருந்தனர்.

மேலும், மற்றவர்களை நாங்கள் சுட்டுக்கொன்று, அடையாளம் தெரியாமல் போவதற்காக தீயிட்டுக் கொளுத்தினோம் என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மெக்சிகோ அட்டார்னி ஜெனரல் கூறும்போது, மாணவர்களை கொன்று, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக பெட்ரோல், டயர், விறகு, பிளாஸ்டிக் கொண்டு எரித்துள்ளனர்.

பின்னர் அந்த உடல்களை சாக்கு பைகளில் போட்டு ஆற்றில் வீசி உள்ளனர்.

மேலும், எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற எண்ணிக்கையை கைது செய்யப்பட்டுள்ள கும்பலினர் உறுதியாக கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=jxAe3vN6ugo