பொறுப்பை நிறைவேற்றுங்கள்! ஈழத் தமிழர்களின் வலி தீர்க்க வினையாற்ற வேண்டும்!

vikneswaran_4‘இலங்கையில் இன்னலுக்கு உள்ளாகும் தமிழர்களின் நிலை இதுதான்’ என்ற உண்மையை வலியுடன் பதிவுசெய்து விட்டுச் சென்றிருக்கிறார், இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய பேச்சு, மர்மத் திரைகள் பலவற்றை அகற்றியிருக்கிறது.

தெற்கில் இருந்து சிங்களவர்களை அழைத்து வந்து வடக்கில் குடியேற்றும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.

இராணுவத்தினருக்கு வீடுகள் கட்டித் தருவது முதல், தமிழர் பகுதிகளில் சிங்களவர்களை அதிகாரிகளாக நியமிப்பது வரை சிங்களமயமாக்கம் பல வழிகளிலும் நடந்து வருகிறது என்கிறார்.

போரின் விளைவாக, ஒரு லட்சம் தமிழ் விதவைகள் உருவாகியுள்ளனர் என நிஜ நிலைமையை வேதனையுடன் விவரிக்கும் முதலமைச்சர், இந்தியா சார்பாக இலங்கைத் தமிழர்களுக்காக வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் ஊழல்கள் மலிந்திருக்கின்றன. அரசியல் சகாயம் பெற்றவர்களுக்கே அந்த வீடுகள் கிடைக்கின்றன என்கிறார்.

உதவியிலும் ஊழல் நடக்கிறது என்பது பெரும் தலைக்குனிவு. ஈழத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவது குறித்து தமிழ்நாட்டில் இருந்து எந்தக் குரல் எழுந்தாலும், இந்தியா சார்பாக இலங்கையில் செய்யப்பட்டுவரும் மறுவாழ்வுப் பணிகளைத்தான் பதிலாக இந்திய அரசு முன்னிறுத்தும்.  அந்த மறுவாழ்வின் உண்மை நிலவரம் இதுதான் எனும் போது, அதை உடனே சரிசெய்ய வேண்டியது இந்தியாவின் பொறுப்பு.

விக்னேஸ்வரனின் மற்றொரு செய்தி தமிழ்நாட்டுக்கு…

எங்களுக்கு இப்போது தேவை உணர்ச்சிகள் அல்ல; சட்டபூர்வமான தீர்வு என்கிறார். இந்தக் கருத்தை, தமிழக அரசியல்வாதிகள் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும்.

ஈழத் தமிழர்கள் நமது தொப்புள்கொடி உறவுகள்’ என்ற உணர்ச்சிபூர்வ மனநிலைக்கு அப்பால் இருந்து இதைச் சிந்திக்க வேண்டும்.

நமது உணர்ச்சிவசப்பட்ட போராட்டங்கள் அங்கு புதிய துன்பம் ஒன்றைத் தோற்றுவித்துவிடக் கூடாது. எனில், நடைமுறையில் ‘எது ஈழத் தமிழர்களுக்கு நன்மை தரும்?’ என்பதைச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

முக்கியமாக, இந்திய அரசு தனது வரலாற்றை தானே ஒருமுறை நினைவூட்டிக்கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர் சிக்கலைத் தீர்க்க 1987-ல் மேற்கொள்ளப்பட்ட ராஜீவ் காந்தி – ஜே.ஆர். ஜெயவர்த்தன ஒப்பந்தத்தில் தமிழர் தரப்பின் சார்பாகக் கையெழுத்திட்டது இந்திய அரசாங்கம்தான்.

ஓர் இனப் போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில், அந்த இனத்தின் பிரதிநிதியாக தானே முடிவெடுத்துச் செயல்பட்ட இந்திய அரசு, அந்தப் பொறுப்பை இப்போதாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஈழத் தமிழர்களின் வலி தீர்க்க வினையாற்ற வேண்டும்!

TAGS: