மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச விசாரணைகளிலிருந்து பாதுகாப்பேன்

Maithri1-100x80ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிபெற்று தன்னுடைய தலைமையில் அரசாங்கம் அமைந்தால் மஹிந்த ராஜபக்ஷவையும், அவரது குடும்பத்தினரையும் சர்வதேச நீதிமன்ற விசாரணைகளிலிருந்து பாதுகாப்பேன் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தவுடன், அவரை போர்க் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூறிவருவதாக இலங்கையில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களுக்கு மத்தியிலேயே மைத்திரிபால சிறிசேன இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவையோ, அவரது குடும்பத்தில் உள்ள ஒருவரையோ, உயிரைப் பணயம் வைத்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடிய இராணுவத் தளபதிகள் தொடங்கி எவரையுமோ போர்க் குற்ற நீதிமன்றத்துக்கு கொண்டுபோக இடமளிக்க மாட்டேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். -http://www.puthinamnews.com

TAGS: