தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மாறினாலும் தமிழ் மக்கள் மாறமாட்டார்கள்!- பா.அரியநேத்திரன்

ariyammp-09அண்மைக் காலமாக குறிப்பாக ஐனாதிபதி தேர்தல் அறிவிப்புக்குப் பின் கட்சி தாவல்கள் தொடர்பான செய்திகள் களைகட்டியுள்ள வேளையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இரண்டு பிரதேச்சபை உறுப்பினர்கள் அரசு பக்கம் இணைந்துள்னர். இன்னும் சிலர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனிடம் இது தொடர்பாக கேட்டபோது, அவர் கூறியதாவது,

எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்தும் திருமலை சேருவில பிரதேச்சபை உறுப்பினர் ஒருவரும், அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேசசபை உறுப்பினர் ஒருவரும் அரசதரப்பில் இணைந்துள்ளனர் என்பதை அவர்களாகவே ஊடகங்களில் ஒப்புக்கொண்டுள்னர்.

உண்மையில் ஒரு பிரதேச்சபை உறுப்பினர் ஒருவர் தாம் சார்ந்த அரசியல் கட்சியில் இருந்து விலகி இன்னுமொரு கட்சியில் இணைந்து கொள்வாரானால் அவர் ஏற்கனவே அங்கம் வகித்த கட்சியினால் உடனடியாகவே தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலமான கடிதத்தை சமர்ப்பித்து அந்த உறுப்பினரை அகற்றிவிட்டு அந்த இடத்திற்கு பட்டியலில் அடுத்த நிலையில் உள்ளவரை அல்லது கட்சி விரும்புகின்ற ஒருவரை நியமிக்க முடியும்.

மேற்குறிப்பிட்ட எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து அரசு பக்கம் சென்ற இரண்டு பிரதேசசபை உறுப்பினர்களுக்கும் பதிலாக வேறு உறுப்பினர்கள் நியமிக்கும் நடவடிக்கை எமது கட்சி மேற்கொண்டுள்ளது.

மாகாணசபை உறுப்பினர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களை பொறுத்தமட்டில் இவ்வாறு தாவும் உறுப்பினர்களை உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும் நீதிமன்றத்தின் மூலமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதன் தீர்பைப்பொறுத்து அந்த உறுப்பினரை மாற்றலாம். இதற்கு காலவகாசம் எடுக்கும். அது நீதிமன்றத்தை பொறுத்து அமையும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து யார்தான் சோரம் போனாலும் யார்தான் பணம் பதவிக்காக அரசு பக்கம் தாவினாலும் அவரை வடகிழக்கு மக்கள் நிராகரித்த வரலாறுதான் உண்மை. இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்.

கடந்த 2004ம் ஆண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலில் ஏறக்குறைய 40000 வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஷ்வரி 2010ம் ஆண்டு தேர்தலில் அரசுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு ஆயிரத்துக்கு குறைவான வாக்குகளை மட்டுமே பெற்றார்.

வன்னி மாவட்டத்தில் 2004ம் ஆண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் சுமார் 30000 வாக்குகளைபெற்று வெற்றியீட்டிய கனகரெட்ணமும், 25000 வாக்குகளை பெற்று வெற்றியீட்டிய வவுனியா கிசோரும் கடந்த 2010ம் ஆண்டு தேர்தலில் அரசு பக்கம் சோரம் போய் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு, அவர்கள் இருவரும் ஆயிரம் வாக்குகளை கூட பெறமுடியவில்லை.

இதேபோன்றுதான் கடந்த 2010ம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு 26895 வாக்குகள் கிடைத்து. அதில் ஏறக்குறைய 11000 விருப்பு வாக்குகளை பெற்று தெரிவான பியசேன அரசு பக்கம் நீல சால்வையுடன் சோரம் போனாலும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எவரும் அவருக்குப் பின்னால் செல்லவில்லை. இதற்கு எடுத்துக்காட்டு கடந்த 2010ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியகூட்டமைப்பு பெற்ற வாக்குகளை விட 2012ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்குமாகாண சபை தேர்தலில் 44716 வாக்குகள் கூடுதலாக கிடைத்தது.

இதிலிருந்து தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். அம்பாறையில் பியசேன அரசு பக்கம் தாவி அபிவிருத்திகளை செய்தாலும் அம்பாறை தமிழ் மக்கள் அரசுக்கு வாக்களிக்கவில்லை. இதேபோல தான் வடக்கு கிழக்கில் உள்ள எல்லாத் தமிழ்மக்களும் கொண்ட கொள்கையில் இருந்து மாறாதவர்கள் என்பதை தொடர்ந்து நிருபித்துள்ளனர்.

ஏனைய கட்சி மக்கள் பிரதிநிதிகள் அரசு பக்கம் தாவினால் அவர்களின் ஆதரவாளர்கள் அவர்களுடன் இணைவது போல் வடகிழக்கு தமிழினம் ஒருக்காலும் சோரம் போகாது என்பதை கடந்த கால வரலாறுகள் தெளிவுபடுத்துகின்றது.

தமிழ்த் தேசியகூட்டமைப்பில் இருந்து விலகி பேரினவாத கட்சியில் எவர் இணைந்து போட்டியிட்டாலும் அல்லது எமது தலைமைகளில் யார்தான் மாறினாலும் மக்கள் மாறமாட்டார்கள்.

எனவே ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் இவ்வாறான சம்பவங்களும் சில வதந்திகளும் இடம்பெற்றாலும் எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து பேரினவாத கட்சிகளில் இணையும் எந்த ஒரு தமிழரையும் வட கிழக்கு தமிழினம் ஏற்றுக்கொண்டதாக சரித்திரம் இல்லை.

இதனை அனைவரும் புரிந்து கொள்ளுமாறும் எந்தவொரு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரோ மாகாணசபை உறுப்பினரோ எக்காரணம் கொண்டும் அரசு பக்கம் செல்லமாட்டார்கள் என்பதை உறுதியுடன் அரியம் எம்.பி மேலும் கூறினார். -http://www.tamilwin.com

TAGS: