தேர்தலில் தோற்றால் அமைதியான முறையில் விலகிச் செல்வேன் என்று கூறிவிட்டார் மகிந்த !

mahinda_rajapaksaஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவினால் தாம் அமைதியான முறையில் விலகிச் செல்லப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியைத் தழுவினால் அமைதியான முறையில் ஆட்சி அதிகாரம் புதிய ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவினால் இராணுவ ஆட்சி நடைபெறும் எனவும், பதவி விலகப் போவதில்லை எனவும் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவதாக தாம் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடையப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு தோல்வியைத் தழுவினால் மிகவும் அமைதியான முறையில் அதிகாரங்களை ஒப்படைத்துவிட்டு விலகிச் செல்வதாகத் தெரிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் ஒரு போதும் தோற்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஏற்கனவே மிகவும் அமைதியான முறையில் அதிகாரங்கள் கைமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் குற்றம் சுமத்துவதனைப் போன்று இலங்கை அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறவில்லை எனவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பலவீனமானவை என அவர் தெரிவித்துள்ளார்.

-http://www.athirvu.com

TAGS: