தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து செயற்­படத் தயார்! அமைச்சர் சுவா­மி­நாதன் நேர்காணல்!

DM Swaminathanஇடம்­பெ­யர்ந்த மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பு­டனும் ஏனைய தமிழ் அர­சியல் கட்­சி­க­ளு­டனும் இணைந்து செயற்­படத் தயா­ராக இருப்­ப­தாக மீள்­கு­டி­யேற்ற, புனர்­வாழ்வு மற்றும் இந்­து­ச­ம­ய­ வி­வ­கார அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன்  பத்திரிகையொன்றுக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் தெரி­வித்தார்.

அவர் வழங்­கிய நேர்­காணல் முழு­மை­யாகக் கீழே தரப்­ப­டு­கி­றது.

கேள்வி:    மீள்­கு­டி­யேற்ற, புனர்­வாழ்வு மற்றும் இந்­து­ச­ம­ய­ வி­வ­கார அமைச்சர் பதவி உங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இதன்­மூலம் யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான ஒரு முக்­கிய பொறுப்பு உங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. முன்­னைய அர­சாங்கம் முழு­மை­யாக மீள்­கு­டி­யேற்றம் செய்­துள்­ள­தாகக் கூறி­ய­ போதும், மக்கள் தற்­பொ­ழுதும் முகாம்­க­ளி­லேயே வாழ்ந்து வரு­கின்­றனர். இது தொடர்பில் நீங்கள் என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­போ­கின்­றீர்கள்?

பதில்:  இது ஒரு முக்­கிய விட­ய­மாகும். மீள் குடி­ய­மர்த்­தப்­ப­டாமல் உள்ள மக்­களின் விப­ரங்­களை எனது அமைச்­சிடம் நான் கோரி­யுள்ளேன். ஆனால், சில முகாம்­களில் உள்ள மக்­களை மீள் குடி­ய­மர்த்த வேண்டாம் என்று பாது­காப்பு அமைச்சு கூறி­யுள்­ள­தாக எனக்குத் தெரி­ய­வந்­துள்­ளது.

எனது அமைச்­சிடம் உள்­ள­வர்­க­ளிடம் இவ்­வ­ளவு கால­மாக ஏன் இந்த மக்கள் மீள் குடி­ய­மர்த்­தப்­ப­ட­வில்லை என்று நான் கேட்­ட­ போது, பாது­காப்பு அமைச்சு அதற்கு அனு­மதி அளிக்­க­வில்லை என்று அவர்கள் பதி­ல­ளித்­தனர். பாது­காப்பு அமைச்சின் இந்த முடிவால் சாதா­ரண மக்கள் பாதிக்­கக்­கூ­டாது.

எனவே பாது­காப்பு அமைச்சின் அறிக்­கை­யினை நான் ஆய்­வுக்கு உட்­ப­டுத்த வேண்டும். பாது­காப்புப் பிரச்­சினை இல்­லாத பட்­சத்தில் அவர்­களை மீளக்­கு­டி­ய­மர்த்த நான் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்வேன். முகாம்­களில் இருக்­கின்ற மக்­களை அவர்­க­ளது சொந்த இடங்­களில் குடி­ய­மர்த்­து­வதே எனது முக்­கிய கட­மை­யாகும். இந்த விடயம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனவே என்னால் முடிந்­த­வரை மீள் குடி­யேற்றப் பணியை நான் மேற்­கொள்வேன்.

அத்­துடன், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ.சுமந்­திரன், சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் மற்றும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் ஆகி­யோ­ரிடம் மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் ஏற்­கெ­னவே கலந்­து­ரை­யா­டி­யுள்ளேன். மேலும், தான் சில நாட்­க­ளுக்குள் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்­தாவை சந்­திக்­க­வுள்ளேன். எனவே, வடக்கு, கிழக்கு பிரச்­சி­னைக்கு இணக்­க­மான தீர்வு நிச்­சயம் கிடைக்கும்.

கேள்வி:  குறித்த மக்­களின் காணிகள் அர­சாங்­கத்தின் வசம் உள்­ள­மை­யினால், அவர்கள் தமது பிள்­ளை­க­ளுக்கு திரு­மணம் செய்து கொடுத்து அவர்­களைக் குடி­ய­மர்த்த முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக மன வருத்­தத்­துடன் தெரி­வித்­துள்­ளனர். இந்தப் பிரச்­சி­னையை நீங்கள் எவ்­வாறு கையாளப் போகின்­றீர்கள்?

பதில்: இரா­ணு­வத்­தி­னரால் சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணி­களின் உறு­திப்­பத்­தி­ரங்கள் அல்­லது காணியை உறு­திப்­ப­டுத்தும் வேறு ஆவ­ணங்கள் மக்­க­ளிடம் இருக்கும் பட்­சத்தில், அவர்­க­ளுக்கு அந்தக் காணி­களை மீளப் பெற்­றுக்­ கொ­டுப்­ப­தற்கு நான் முன்­வ­ருவேன்.

கேள்வி: வன்னிப் பிர­தே­சங்­களில் வாழ்­கின்ற மக்கள் இன்று அன்­றாட தேவை­க­ளுக்­கா­கவும், உண­வுக்­கா­கவும் கஷ்­டப்­பட்டு வரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு வாழ்­வா­தார உத­வி­களை வழங்க நீங்கள் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வீர்­களா?

பதில்:  வரவு செலவுத் திட்­டத்தில் எவ்­வ­ளவு நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது என்று எனக்குத் தெரி­ய­வில்லை. ஐந்து அமைச்­சுக்கு 66 வீதம் நிதியை ஒதுக்­கி­விட்டு, ஏனைய 38 அமைச்­சு­க­ளுக்கு 33வீதம் நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. எனவே எமக்கு இந்த வேலைத் திட்­டங்­களை மேற்­கொள்­வ­தற்கு போதிய நிதி வசதி கிடைக்­குமா என்­பது சந்­தே­க­மாகும். அவ்­வாறு நிதி போத­வில்லை என்றால் ஏனைய தொண்டு நிறு­வ­னங்­க­ளி­னதும், வெளி­நா­டு­க­ளி­னதும் உத­வி­க­ளையே நாங்கள் நாட­வேண்டும்.

கேள்வி: கஷ்­டங்­களை எதிர்­நோக்கும் தமிழ் மக்­க­ளுக்கு உத­வி­களைச் செய்­வ­தற்கு புலம்­பெயர் அமைப்­புக்கள் தயா­ராக இருக்­கின்­றன. அவர்­களின் உத­வி­களை நீங்கள் பெற்­றுக் ­கொள்­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ள­னவா?

பதில்:  அவ்­வாறு உத­வி­களைப் பெறு­வ­தற்கு சந்­தர்ப்­பங்கள் இருந்­த ­போதும், புலம்­பெயர் அமைப்­புக்கள் என்று கூறி­னாலே பெரும்­பான்மை இனத்­த­வர்கள் வெறுப்பைக் காட்­டு­கின்­றனர். ஆகவே, இந்த விட­யத்தை நன்கு திட்­ட­மிட்டே மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. புலம்­பெயர் அமைப்­பு­களின் மூலம் உத­விகள் கிடைக்­கின்­றன என்று நாங்கள் கூறும் ­போது, தென்­னி­லங்­கையைச் சேர்ந்­த­வர்கள் தமது எதிர்ப்­பையே காட்­டு­வார்கள். ஆகவே, புலம்­பெயர் அமைப்பு என்ற குறிப்­பிட்டுக் கூறு­வதை விடுத்து, வெளி­நாட்டு அமைப்பு ஒன்­றின்­ மூலம் வடக்கு மக்­க­ளுக்கு உத­விகள் கிடைக்கும் என்றால், அதனை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அந்த அமைப்பு தகு­தி­ வாய்ந்­த­தாக இருக்­க­வேண்டும்.

கேள்வி:  வெளி­நாட்டு அமைப்­புக்­களின் பண உத­வி­களை வட மாகாண சபை நேர­டி­யாகப் பெற்று மக்­க­ளுக்கு வழங்­கக்­கூ­டிய வச­தி­களை நீங்கள் ஏற்­ப­டுத்திக் கொடுப்­பீர்­களா?

பதில்: அர­சாங்­கத்தின் அனு­ம­தி­யு­டன்தான் இவ்­வா­றான ஓர் பணப் பரி­மாற்­றத்­தினை மேற்­கொள்ள முடியும். எனவே இந்த விட­யத்தில் நான் தனிப்­பட்ட முறையில் எந்தக் கருத்­தையும் உறு­தி­யாகத் தெரி­விக்க முடி­யாது. அர­சாங்­கத்தின் அனு­மதி கிடைக்கும் பட்­சத்தில், வெளி­நாட்டு நிதி­யு­த­வி­களை வட­மா­காண சபைக்கு வழங்க நான் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்வேன். மாகாண சபைக்கு நேர­டி­யாக நிதி­யு­த­விகள் கிடைப்­பதில் எனக்கு எந்த ஆட்­சே­ப­னையும் இல்லை. ஆனால் அது சட்­ட­பூர்­வ­மா­ன­தாக இருக்க வேண்டும் என்­பதே முக்­கிய பிரச்­சி­னை­யாகும்.

கேள்வி:  யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு சுய­தொழில் வாய்ப்­பு­களை பெற்றுக் கொடுப்­ப­தற்கு என்ன நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளப் போகின்­றீர்கள்?

பதில்:  அதற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ள முடியும். ஆனால், மூன்று மாதங்­க­ளுக்குள் இந்த விட­யங்கள் அனைத்­தையும் செய்ய முடி­யுமா என்­பது கேள்­விக்­கு­றி­யாகும். சுய­தொ­ழில்­களை மேற்­கொள்­வ­தற்­கான பயிற்சி நிலை­யங்­களை அமைக்க முடியும். ஆனால் அதற்கு எமக்கு இருக்­கின்ற கால அளவு மிகவும் குறு­கி­யது. அதற்குள் செய்ய முடி­யுமா என்­பது சந்­தே­கமே. அதற்கு எட்டு மாதங்கள் அல்­லது குறைந்­தது ஆறு மாதங்­க­ளா­வது தேவைப்­படும்.

கேள்வி: இந்து சமய விவ­கார அமைச்சு உங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இதன்­மூலம் நீங்கள் எவ்­வா­றான பணி­களை மேற்­கொள்­ளப்­போ­கின்­றீர்கள்?

பதில்:  வட பகு­தியை எடுத்துக் கொண்டால், அங்கு அழ­கா­னதும் சிறப்பு வாய்ந்­த­து­மான பல கோயில்கள் காணப்­ப­டு­கின்­றன. அதே­வேளை, அந்தக் கோயில்­களில் ஆகம விதிப்­படி பூஜைகள் கிரி­யைகள் நடத்­தப்­ப­ட­வேண்டும். அண்­மை­யில்­கூட வட­ப­கு­தியைச் சேர்ந்த சில இந்­து­மதத் தலை­வர்கள் என்னைச் சந்­தித்­தி­ருந்­தார்கள். அப்­போது, அவர்கள் ஆகம முறைப்­படி ஆலயக் கட­மை­களை மேற்­கொள்­வது தொடர்பில் என்­னுடன் கலந்­து­ரை­யாடியிருந்­தனர்.

எனவே இந்­து­மதம் தொடர்­பி­லான இவ்­வா­றான அடிப்­படை நோக்­கங்­களை முதலில் நிறை­வேற்ற வேண்டும் என்று நான் எண்­ணி­யுள்ளேன். கோவில் வழி­பா­டுகள் சீராக இருந்­தால்தான், அந்தச் சமு­தாயம் சீராக இருக்கும். சமு­தாயம் முன்­னே­று­வ­தற்கு கோவில் அவ­சி­ய­மாகும். கோவில் மட்­டு­மன்றி ஏதா­வது ஒரு மத வழி­பாட்டுத் தலங்கள் இருப்­பது அவ­சி­ய­மாகும். எனவே ஆலய வழி­பா­டுகள் சிறப்­பா­கவும், சீரா­கவும் இடம்­பெற வேண்டும். எனவே அதற்­கான பணி­களை மேற்­கொள்­வ­தற்கு நான் தயா­ராக இருக்­கின்றேன்.

கேள்வி:  நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த முன்­னேஸ்­வரம் ஆல­யத்தின் இராஜ கோபு­ரத்­தினை மீண்டும் கட்­டு­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச அனு­ம­தி­யளித்­தி­ருந்தார்.  இது தொடர்பில் நீங்கள் என்ன நட­வ­டிக்கை மேற்­கொள்­வீர்கள்?

பதில்:  அந்த ஆலயம் மிகவும் பழைமை வாய்ந்­தது. அந்த ஆல­யத்தில் நினைத்­த­வாறு எத­னையும் செய்ய முடி­யாது. முன்­னேஸ்­வரம் ஆலயம் ஆலய பரி­பா­லன சபை­யினால் மிகவும் சிறப்­பாக பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஆனால், இராஜ கோபுரம் கட்டும் பணி ஏன் நிறுத்­தப்­பட்­டது என்­பது எனக்குத் தெரி­ய­வில்லை.

அதே­வேளை, இந்த ஆலயத்திற்கு புராதன காலத்திலேயே ஏன் இராஜ கோபுரம் கட்டப்படவில்லை என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்தவொரு கோயில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டாலும், அதற்கான உதவிகளைச் செய்ய நான் தயாராகவே இருக்கின்றேன்.

கேள்வி:  மதம் மாற்றப் பிரச்சினை தொடர்பில் நீங்கள் என்ன தீர்வைப்பெற எண்ணியுள்ளீர்கள்.?

பதில்:  மதத்தினைச் சரியாகப் போதித்தால், இந்த மதமாற்றப் பிரச்சினை ஏற்படாது. இதற்காக நாங்கள் திட்டங்கள் எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது. சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு இந்து மதத்தைப் போதிக்க வேண்டும். அதற்காக பல அறநெறிப் பாடசாலைகளை ஆரம்பித்துள்ளோம். அதன்மூலம், ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இந்து மதத்தினுடைய முக்கியத்துவத்தை தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் இந்து மதத்தின் முக்கியத்துவத்தை அறிந்தால் எப்போதுமே மதம் மாறமாட்டார்கள்.

-http://www.tamilwin.com

TAGS: