தமிழ் தேசியவாதிகளை தள்ளிவைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! தமிழ் தேசியவாதிகள் யார்?

TNAதமிழ்மக்களின் உரிமைக்காக உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படுபவர்களே தமிழ் தேசியவாதிகளாவார். இவர்கள் தம் மக்களுக்காக உயிரைக்கொடுக்கவும் தயங்கமாட்டார்கள். மக்களுக்காக எத்துணை துன்பங்கள் நேர்ந்தாலும் தாங்கிக்கொள்வார்கள்.

இந்த வரிசையில் இன்று முதன்மையானவர்களாக மாவீரர்களும், மாமனிதர்களும், நாட்டுப்பற்றாளர்களும் உள்ளார்கள். அடுத்து இந் நோக்கத்திற்காக உழைத்து எதிரியின் சிறைகளில் வருடக்கணக்காக வாடும் எமது உறவுகளும் இந்த வரிசையினைச் சேர்ந்தவர்களே. இன்று தமிழ் தேசியத்திற்காக உறுதியான கருத்துக்களைக் கூறி அதன்வழி செயல்படுபவர்களும் தேசியவாதிகளே ஆவார்.

இன்று இப்படியான தேசியவாதிகளை இனம்கண்டு கட்சியில் இருந்து விலக்கி வருகிறது தமிழ்தேசியக்கூட்டமைப்பு. 2009வரையும் விடுதலைப்புலிகளோடு சேர்ந்து அரசியல் நடாத்திய இவர்கள் புலிகளின் இராணுவ வீழ்ச்சியை அடுத்து ஒரு வருடத்திலேயே அதுவரை பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தேசியவாதிகளான கஜேந்திரனையும், பத்மினி சிதம்பரநாதனையும் விலக்கிவைத்தார்கள். இக் காரணத்திற்காக மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் மகனான கஜந்திரகுமார் கூட்டமைப்பை விட்டு விலகினார். இன்று இக் கருத்தில் உறுதியாக இருக்கிற ஆனந்தி, ரவிகரன் போன்றவர்களையும் விலக்கி வைக்க ஆயத்தமாகிறார்கள்.

தந்தை செல்வா தேசியத்தை ஒரு போதும் விலை பேசவில்லை. சிங்கள த்தலைவர்களோடு நேர்மையாகவும் பகிரங்கமாகவும் ஒப்பந்தங்களைச் செய்தார்

1) பண்டா – செல்வா ஒப்பந்தம்
2) டட்லி – செல்வா ஒப்பந்தம்

இதில் இரகசியமாக எதுவுமே செய்யவில்லை. தனது முதல் கோரிக்கையாக சமஸ்டி அரசியலை முன்வைத்தபோதும். தனது கட்சிக்கு தமிழரசுக்கட்சி என்ற தமிழர்களின் தாகத்தையும் எண்ணத்தையுமே பெயராக வைத்தார். தமிழ்தேசியத்தில் இருந்து ஒரு போதும் விலகியதில்லை. கொடூரமான அடக்குமுறைகளுக்கு முன்னால் பயந்து நடுங்கி ஒதுங்கி நிற்கவில்லை. உறுதியுடன் பல போராட்டங்களை நடாத்தினார். அகிம்சைப் போராட்டத்திலும் இரத்தம் சிந்தினார். தமிழ் மக்களை ஓர் எழுச்சிபெற்ற இனமாகவே வளர்த்தார். சமாதானமாகச் செயல்படச் சந்தர்ப்பங்கள் வந்தபோதும் அதை நேர்மையுடனையே செய்தார். இறுதியில் சிங்களவர்களோடு சேர்ந்துவாழ முடியாது என்பதை அநுபவபூர்வமாக உணர்ந்த நிலையில் துணிவோடு தமிழீழத்தைப் பிரகடனம் செய்தார்.

அதைத் தொடர்ந்து தலைவர் பிரபாகரன் தமிழ்த்தேசியத்தை உலகளவுக்கு வளர்த்துச் சென்றார். தந்தை செல்வா ஆரம்பித்த தமிழர் விடுதலைக் கூட்டணிதான் வளர்ச்சியடைந்து தலைவர் பிரபாகரனின் ஆசியோடு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாக பிறப்பெடுத்தது. விட்ட இடத்தில் இருந்து செல்லவேண்டிய இவர்கள் இன்று தொட்ட இடத்தில் போய் நிக்கிறார்கள் இது மோசடியான சூழ்ச்சியான சரணாகதி அரசியலாகும். இது உடுபிடவைகளில் அழுக்குப்படாமல் நடாத்தும் அரசியலாகும்.

இன்று தமிழ் மக்களுக்குத் தேவை உண்மையான, உறுதியான, விலைபோகாத தியாகம் செய்யக்கூடிய தலைமையேயாகும்.
இவர்கள் 2009க்கு பின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ற போர்வைக்குள் நின்றுகொண்டு அரசியல் நடாத்த ஆரம்பித்துள்ளார்கள். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக போர்வையை விலக்கிக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.

இந் நடவடிக்கைகளில் ஒன்றுதான் தேசியவாதிகளைப் புறம்தள்ளும் நடவடிக்கையாகும். தேசியவாதிகளை வைத்திருந்தால் உடையில் அழுக்குப்படாத தங்களின் சுகபோக அரசியலை நடாத்த முடியாது என்பது இவர்களுக்குத் தெரியும். தமிழ் மக்களை எவரும் தொடர்ச்சியாக ஏமாற்றமுடியாது என்பதை விரைவில் புரிந்துகொள்வார்கள்.

எதிரிகளோடு நேரடியாகச் செயல்படுபவர்களை விட, போர்வைக்குள் இருந்துகொண்டு அரசியல் நடாத்தும் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். தமிழ்மக்கள் விழிப்புடன் இருந்தால் இவர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடுவார்கள்
சொந்தக்காலில் நின்று அரசியல் செய்ய வேண்டியவர்கள் சிங்களவர்களின் கால்களிலும், வெளிநாட்டவர்களின் கால்களிலும் நின்று அரசியல் செய்து கொண்டிருக்கிரார்கள்.

ஆங்கிலம் தெரிந்தவர்கள் தான் அரசியல் செய்யலாம் என்ற அருவருக்கத்தக்க அடிமைத்தன அரசியலை தமிழ்மக்கள் மத்தியில் வளர்த்து வருகிறார்கள். ஆங்கிலம் தெரிந்தால்தான் உலகில் அரசியல் நடத்தலாம் என்ற நிலை உலகில் வேறெங்கும் இருக்கவில்லை. அடிமைத்தனத்தில் ஊறிய இவர்களிடம் தான் இது ஊற்றெடுத்துள்ளது. மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளமே. சொந்த மொழியை மறைத்து வேறொரு மொழியாளனாக நாம் மாறவேண்டிய தேவை உண்மையில் இல்லை. உலகில் உள்ள தலைவர்கள் ஆங்கிலம் தெரிந்து தான் அரசியல் நடாத்துகிறார்கள் என்ற நிலையும் இல்லை. உலகப்புகழ் பெற்ற தலைவர் மா ஒவுக்கு ஆங்கிலம் தெரியாது. அதுபோன்று இன்று அரசியல் செய்துகொண்டிருக்கும் பிரான்ஸ், யேர்மன் அதிபர்களுக்கும் ஆங்கிலம் தெரிந்தும் தங்களது மொழியிலையே தங்களது அரசியலைச் செய்துவருகிறார்கள். உலகளாவியத் தொடர்புகளையும் பேணி வருகிறார்கள். இந்த உண்மைகள் அனைவருக்கும் தெரிந்தவைகளே.

இதுபோன்று பட்டம் பதவி பெற்றவர்கள்தான் அரசியல் நடத்தலாம் என்ற முற்றிலும் பிழையான எண்ணங்களை தமிழ் மக்கள் மத்தியில் விதைத்து வருகிறார்கள். அரசியல் செய்வதற்கு உண்மையான மக்கள் சேவையும். அரசியல் அறிவுமட்டும் இருந்தாலே போதுமானதாகும். இவை மட்டுமே தேவையான தகுதிளாகும். காமராசர் பட்டம் பதவி பெற்று அரசியலுக்கு வந்தவரல்ல. இது போன்று உலகப்புகழ் பெற்ற பல தலைவர்கள் உள்ளார்கள் என்பதும் உண்மைகளாகும்.

எமது மாவீரர்களும், மாமனிதர்களும், நாட்டுப்பற்றாளர்களும் எம் மக்கள் இம் மண்ணில் பூரண உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காகவே விலை மதிப்பில்லாத உயிர்களை அற்பணித்தார்கள். அவர்களின் தியாகத்தில் உருவான தமிழ்தேசியத்தை விலை பேசலாமா?

சரணாகதி அரசியலுக்குச் சென்று அரை குறைத் தீர்வைப் பெற்றுக்கொள்வது துரோகத்தனமில்லையா ?

எதிரிகள் இவர்களின் பலயீனத்தைப் பயன்படுத்தி எலும்புத்துண்டுகளை கொடுத்துவிட்டு, தமிமக்களின் தலைகளில் மிளகாயை அரைத்து விடுவார்கள். இன்றைய தேவை உண்மையான தேசியவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்பதேயாகும்.

-மாறன்-

-http://www.pathivu.com

TAGS: