கடத்தப்பட்ட 219 மாணவிகளின் நிலை என்ன?

boko_haram_abducted_girlsபோகோஹரம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட மாணவியர் குறித்த தகவல் தெரியவில்லை என நைஜீரிய நாட்டு ராணுவ தளபதி கூறியுள்ளார்.

நைஜீரியாவில் வசிக்கும் பிற மதத்தவர்கள், முஸ்லிம்களாக மதம் மாற வேண்டும் என்றும் மறுப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் போகோஹரம் பயங்கரவாதிகள் மிரட்டி வருகின்றனர்.

மேலும், நாடு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நைஜீரியாவின் சிபோக்(Chibok) நகரில் உள்ள ஒரு பள்ளியில் நுழைந்த போகோஹரம் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் 276 மாணவியரை கடத்திச் சென்றனர்.

பின்னர் அவர்களில் 57 பேரை விடுவித்தனர், மீதமுள்ள 219 மாணவிகளை இன்று வரை அவர்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை நடந்த பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் 11 மாதங்களுக்கு முன் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 219 மாணவியர் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விக்கு பதில் அளித்த அந்நாட்டு ராணுவ தளபதி கென்னத் மினிமா(Kennath Minima), வடகிழக்கு பகுதியை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்க போர் நடந்து வருகிறது.

இதுவரை கடத்தப்பட்ட மாணவியர் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும், கடத்தப்பட்ட மாணவியரை தேடும் பணி நடந்து வருகிறது.

ஆனால், அவர்கள் செல்லும் இடங்களுக்கு, மாணவிகளையும் அழைத்துச் செல்கின்றனர். விரைவில் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து மீட்போம் என்று கூறியுள்ளார்.

-http://world.lankasri.com