மகளுக்காக 43 வருடம் “தந்தை”யாக வாழ்ந்த தாய்….எகிப்தில் ஒரு உருக்கம்!

mother-who-dressed-as-manகெய்ரோ: மகளை காப்பாற்றுவதற்காக கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் ஆண் வேடத்தில் வாழ்ந்த பெண் ஒருவருக்கு லட்சியத் தாய் விருது கொடுத்து எகிப்து அரசு கவுரவித்துள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோவை சேர்ந்தவர் சிசா அபு தாவோக் (64). கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு, சிசா கர்ப்பிணியாக இருந்த போது, அவரது கணவர் இறந்து விட்டார். இதனால், சிசாவின் எதிர்காலம் கேள்விக்குறியானது. அவரது குல வழக்கப்படி கணவனை இழந்த பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது. அடுத்தவரை நம்பி அதாவது பிச்சை எடுத்துத் தான் வாழ வேண்டும் என்ற நிலை.

ஆனால், இப்படி வாழ சிசாவின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. தனது உழைப்பில் வாழ விரும்பினார். மகளுக்காக 43 வருடம் இதற்கிடையே, சிசாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஹூடா எனப் பெயரிட்டார் சிசா.

தனது மகளை கவுரமாகவும் அருமை பெருமையாகவும் வளர்க்க முடிவெடுத்த சிசா, வேலைக்கு சென்று தன் சொந்தகாலில் நிற்க விரும்பினார். எனவே, மற்றவர்களின் கண்களுக்குத் தப்ப, ஆண் வேடம் அணிந்தார்.

மிகவும் தளர்வான உடைகளை அணிந்த சிபு, தனது சிகை அலங்காரத்தையும் மாற்றினார். செங்கல் சூளை மற்றும் கட்டிட வேலைக்கு ஆண்களைப் போலவே சென்றார். தெரு வீதிகளில் ‘ஷு’க்களுக்கு பாலிஷ் போட்டார். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தனது மகளை வளர்த்து படிக்க வைத்தார். பின்னர் தன் சொந்த சம்பாத்தியத்திலேயே ஹூடாவுக்கு திருமணமும் நடத்தி வைத்தார்.

மகளின் திருமணத்தை முடித்த கையோடு, தன் பொறுப்புகள் தீர்ந்தது எனக் கருதி தனது வேடத்தைக் கலைக்க எண்ணினார் சிசா. ஆனால், பிரசவத்தின்போது நோய்வாய்ப்பட்டார் ஹூடா. இதனால், மீண்டும் ஆண் வேடத்திலேயே வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் சிசாவுக்கு உண்டானது.

கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் ஆண் வேடத்திலேயே வாழ்ந்து வரும் சிசா, தன் ஊதியத்திலேயே மகளையும், அவளது குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார். சிசாவின் வாழ்க்கைக் குறித்து அறிந்த எகிப்து அரசு, அவருக்கு ‘லட்சியத்தாய்’ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

http://tamil.oneindia.com