இராணுவத் தலையீடுகள் அற்ற தமிழ் மக்களின் சுதந்திரமான மீள்குடியேற்றம் சாத்தியப்பட வேண்டும்: மாவை சேனாதிராஜா

Mavai-Senathirajahஇராணுவத் தலையீடுகள் அற்ற தமிழ் மக்களின் சுதந்திரமான மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உரிய முறையில் உடன் மீள்குடியேற்ற வேண்டும். அதுவே, நீண்டகாலமாக முகாம்களில் வாடிய மக்களுக்கான தீர்வாக அமைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட பகுதிகளை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மக்கள் சென்று பார்வையிட்டனர். ஆனாலும், தமது வளவுகளுக்குச் செல்வதை இராணுவம் அனுமதிக்கவில்லை. வீதியிலிருந்தே பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கும் வலிகாமத்தில் 1100 ஏக்கர் நிலப்பரப்பையும், சம்பூரில் 1052 ஏக்கர் நிலப்பரப்பையும் விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்தது. அதற்கமைய கடந்த 13ஆம் திகதி வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வளலாய் கிராம சேவையாளர் பிரிவு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்தநிலையில், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வயாவிளான் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவு நேற்றுமுன்தினம் விடுவிக்கப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு அமைய குறித்த கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த மக்களை அரச அதிகாரிகள் நேற்றுமுன்தினம் அழைத்துச் சென்றனர்.

ஆனால், வல்லை – அராலி பிரதான வீதியைத் திறந்து விட்ட இராணுவத்தினர், வீதியின் இரு மருங்கிலும் உள்ள காணிகளுக்குள் செல்ல பொதுமக்களை அனுமதிக்கவில்லை. பிரதான வீதியின் இருபுறமும், பொது மக்களின் சில வீடுகளிலும் அமைக்கப்பட்ட இராணுவ முகாம்கள் அப்படியே இருக்கின்றன. அவற்றுக்கு முன்பாக புதிதாக நிரந்தர பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இராணுவ முகாம்கள் அமைக்கப்படாத வீடுகள் மற்றும் ஆலயங்கள் அடியோடு இடித்தழிக்கப்பட்டுள்ளன. வீதிகள் கூட அடையாளம் தெரியாதவாறு அழிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, வயாவிளான் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளான ஒட்டகப்புலம், தோலகட்டி, வடமூலை ஆகிய பகுதிகளுக்குள் மக்கள் செல்வதற்கு நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்படவில்லை. அந்த இடங்களுக்குச் சென்ற மக்களை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

25 வருடங்களின் பின்னர் தமது சொந்த இடத்தை – வீட்டை – காணியைப் பார்க்கலாம் என்ற ஆவலோடு வெள்ளிக்கிழமை வசாவிளான் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குச் சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் கதறியழுதவாறு திரும்பியுள்ளனர்.

தமது சொந்த இடங்களில் மீள்குடியேற வேண்டும் என்று கோரியே இந்த மைத்திரி அரசுக்கு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். ஆனால், இராணுவத்தைத் திருப்திப்படுத்தும் விதத்தில்தான் மீள்குடியேற்ற விடயத்தை அரசு கையாள்கின்றது. இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தை முழுமையாக வெளியேற்றி மக்களை உரிய முறையில் அரசு மீள்குடியேற்ற வேண்டும். இல்லையேல் சொந்த நில மீட்புக்கான தமிழரின் அஹிம்சைப் போராட்டம் மீண்டும் வெடிக்கும். இதனை நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை நேரில் சந்தித்துத் தெரிவிக்கவுள்ளோம்.

எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அரச தலைவர்கள், இராணுவத் தலையீடுகள் இல்லாத தமிழ் மக்களின் சுதந்திரமான மீள்குடியேற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். தமிழ் மக்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உரிய முறையில் உடன் மீள்குடியேற்ற வேண்டும்.” என்றுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: