முன்னர் இராணுவத்தைக் குறைப்போம் என்று கூறியவர்கள் தற்போது குறைக்கப்படமாட்டாது என்கிறார்கள்!

wigneshwaranஇலங்கையின் மத்திய அரசாங்கமானது வடமாகாணத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முஸ்தீபு செய்கின்றது என வட மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் ஹோலியாங் சு விடம் வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன் வடக்கில் இராணுவத்தை குறைப்போம் என்று கூறியவர்கள் தற்போது இராணுவம் குறைக்கப்படமாட்டாது என கூறுவதுடன் காணமல் போனவர்கள் தொடர்பாக பிரச்சினைக்கு இதுவரையில் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளரும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ஹோலியாங் சு வடமாகாணத்திற்கு நேற்றை தினம் விஜயம் செய்திருந்தார்.

இதன்போது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து யுத்தத்தின் பின்னரான வடக்கு நிலைமைகள் , வடமாகாணசபையின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினார்.

மேற்படி கலந்துரையாடல் தொடர்பாக ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக ஆராயவே ஹோலியாங் சு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததன் பிரததான நோக்கமாகவுள்ளது. கடந்த வருடமும் இவர் இங்கு வந்துள்ளார்.

மேலும் கடந்த ஆட்சியின் போது தாம் இங்கு பணிபுரிய தடைகள் காணப்பட்டன. தற்போது தடைகள் யாவும் தளர்வடைந்துள்ளதுடன் சுதந்திரமாக பணிபுரியக்கூடிய நிலமை ஏற்பட்டுள்ளதை அவரிடத்தில் குறிப்பிட்டேன்.

மத்திய அரசாங்கமானது வடமாகாணத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கின்றது. முன்னர் வடக்கில் இராணுவத்தை குறைப்போம் என்று கூறியவர்கள் தற்போது இராணுவம் குறைக்கப்படமாட்டாது என தெரிவிக்கின்றனர் என்பதை அவருடைய கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

அதுமட்டுமல்லாது முக்கியமாக காணாமல்போனோர் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வோ பதிலோ இன்னமும் கிடைக்கவில்லை என்பதையும் அவரிடத்தில் சுட்டிக்காட்டினேன்.

வடமாகாணத்திற்கு பணிபுரிவதற்கு நாம் ஆவல் கொண்டுள்ளோம். ஆனால் தற்போது நிதி கிடைப்பது குறைவாக இருக்கின்றது.

இருப்பினும் எமக்கு கிடைக்கும் நிதியை என்றாலும் வடமாகாணத்திற்காக முழுமையாக செலவளிக்க தாம் தயாராக இருப்பதான என்னிடத்தில் ஐ.நா உதவிச்செயலாளர் உறுதியளித்தார் என்றார்.

-http://www.tamilcnnlk.com

TAGS: