சீனாவுடனான போர்ப்பயிற்சியை இலங்கை மறைக்க முனைவது ஏன்?

Silk-Road-Cooperation-2015-1கடந்த மாத இறுதியில் சீன – இலங்கைப் படையினருக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட போர்ப்பயிற்சிக்கு, சீனா வைத்திருக்கும் பெயர் பட்டுப்பாதை ஒது்துழைப்பு 2015  என்பதாகும்.

சீனா தனது கனவுத் திட்டமான பட்டுப்பாதை திட்டத்தை செயற்படுத்துவதற்கு பெருமளவு வளங்களை ஒதுக்கி பல்வேறு நாடுகளையும் தன்பக்கம் திருப்பி வருகிறது. அது முற்றிலும் வணிக நோக்கம் கொண்ட திட்டம் என்றே சீனாவினால் கூறப்பட்டு வந்தாலும், அதன் பின்னால் மிகப்பெரிய இராணுவ ஆதிக்க நோக்கம் ஒழிந்து கிட்டப்பதாக பொதுவான விமர்சனங்கள் உள்ளன.

இலங்கையும் இந்த கடல்சார் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்து கொள்ள முன்னைய ஆட்சிக்காலத்தில் ஒப்புதல் வழங்கியிருந்தது. ஆனால் புதிய ஆட்சி அமைந்த பின்னர், பட்டுப்பாதைத் திட்டம் தொடர்பான இலங்கையில் நிலை என்னவென்பது தெளிவற்றதாகவே இருக்கிறது.

எனினும் பட்டுப்பாதை ஒத்துழைப்பு 2015 என்ற பெயரை இலங்கைப் படையினருடனான போர்ப்பயிற்சிக்கு சீனா சூட்டியிருப்பது முக்கியத்துவம் வாயந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. தனது பட்டுப்பாதை திட்டம் உலகளாவிய செழிப்பையும், வர்த்தக விருத்தியையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டது என்று சீனா கூறி வந்திருக்கிறது.

குறிப்பாக இந்தத் திட்டத்தின் மூலம் ஆசிய நாடுகள் செழிப்படையும் என்று ஆசை காட்டி வந்திருக்கிறது.

அதன் மூலமே இந்தத் திட்டத்திற்குள் பல நாடுகளைக் கவர்ந்திழுத்திருக்கிறது.

ஆனால் இதன் பின்னாலுள்ள இராணுவ நோக்கத்தை, போர்ப்பயிற்சி ஒன்றுக்கு, பட்டுப்பாதை ஒத்துழைப்பு என்று பெயர் சூட்டியதன் மூலம் சீனா சந்தேகம் கொள்ள வைத்திருக்கிறது.

அதுவும் தற்போதைய தருணத்தில் இப்படியானதொரு பெயருடன் நடத்தப்படும் போர்ப்பயிற்சியில் ஈடுபடுவது குறித்து இலங்கை அரசாங்கம் கூட சற்று சங்கடத்துக்கு உள்ளாகியிருக்கக் கூடும்.

இந்தியா, சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் சீரான உறவைப் பேணவும், எந்தத் தரப்பையும் சாராமல் செயற்படவும் எத்தனிக்கும், இலங்கை அரசாங்கத்துக்கு, சீனாவின் இந்தப் பெயர் சூட்டல் விருப்பத்துக்குரிய ஒரு விடயமாக இருக்காது.

பட்டுப்பாதை திட்டம் வணிக ரீதியானதல்ல, இராணுவ நோக்கத்தையும் உள்ளடக்கியது என்பதற்கு, சீனாவின் பெயர் சூட்டலே முதல் ஆதாரமாகும்.

சீனாவில் அரசியல், இராணுவம், பொருளாதாரம் மட்டுமன்றி இலக்கியங்கள் கூட எல்லாமே ஒரே இலக்கினை நோக்கி ஒன்று குவிக்கப்பட்டவை.

அந்தவகையில் தான், சாதாரண வணிகத் தட்டம் என்று வெளிப்படையாகக் கூறிக் கொள்ளப்பட்ட பட்டுப்பாதைத் திட்டத்தின் பெயரிலேயே போர்ப்பயிற்சியையும் சீனா தொடங்கியிருக்கிறது.

கடந்த ஆண்டு செப்படம்பர் மாதம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, பாதுகாப்புத் தொடர்பான உடன்பாடு ஒன்றும் செய்து கொள்ளப்பட்டது.

அதுபற்றிய முழுமையான விபரங்கள் அப்போது வெளியிடப்பட்டிருக்கவில்லை.

அந்த உடன்பாட்டில் இடம்பெற்ற கூட்டுப் போர்ப்பயிற்சிகளை மேற்கொள்ளும் திட்டத்டதின் கீழ் தான், இந்தப் போர்ப்பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு சீனா ஆயுதங்களை வழங்கி உதவி செய்திருந்தது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், சீன பாதுகாப்பு உயர்மட்டங்கள் தொடர்ச்சியாக இலங்கைக்கு மேற்கொண்ட பயணங்களின் மூலம் இலங்கைப் படைகளுடன் நெருக்கம் ஏற்படுத்தப்பட்டது.

இலங்கை – சீனப் படையினருக்கு இடையில் பயிற்சிகள், ஒத்திகைகள் போன்றவற்றை அதிகரிப்பதன் மூலம், இருதரப்பு உறவுகளை புதிய கட்டத்துக்கு கொண்டுசெல்ல சீனா முடிவெடுத்திருந்தது.

கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக கொழும்பு, திருகோணமலை உள்ளிட்ட நகரங்கள், சீன ஜெனரல்களின் பயணத் திட்டத்தில் முக்கியமான இடங்களாக இருந்து வந்ததை தெளிவாக அவதானித்திருக்கலாம்.

இந்தப் பயணங்களின் போதும், சீன ஜனாதிபதியின் பயணத்தின் போதும், இலங்கைப் படையினருக்கு சீனாவில் பயிற்சி வசதிகளை அதிகரிக்கவும் கூட்டுப் ’போர்ப்பயிற்சிகளை மேற்கொள்ளவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன.

இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்கான இடங்களை அதிகரித்துள்ள சீனா இலங்கைப் படையினருடனான பயிற்சிகளின் மூலம் தானும் புதிய அனுபவங்களை கற்றுக்கொள்ள முனைகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான வெற்றிகரமாகச் செயற்பட்ட இலங்கைப் படையினரின் அனுபங்கள் இப்போது சீனாவுக்குத் தேவைப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கையில் நடத்தப்படும் போர்ப்பயிற்சிகள், பாதுகாப்புக் கருத்தரங்குகளில் சீனா முழுமையாகப் பங்கேற்று வந்திருக்கிறது.

குறிப்பாக இலங்கையின் சிறப்பு படைப் பிரிவுகள் கடற்படை விமானப்படையுடன் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் நீர்க்காகம் என்ற போர்ப்பயிற்சிக்கு சீனா தனது இராணுவ அணிகளை அனுப்பி வருகிறது.

அதேவேளை, கடற்படை, இராணுவம் ஆகியவற்றினால் ஒழுங்கு படுத்தப்படும் பாதுகாப்புக் கருத்தரங்குகளிலும் சீனா பங்கேற்று வருகிறது.

இதற்குப் பிரதான காரணம் சீனாவுக்கும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.

குறிப்பாக வடமேற்கில் உள்ள சீனாவின் மிகப்பெரிய மாகாணமான ஜின்ஜியாங் மாகாணத்தில் பல தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன.

பல இனக்குழுக்கள் வாழுகின்ற ஜின் ஜியாங் மாகாணம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மொங்கோலியா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் எல்லையைக் கொண்டுள்ளது. இங்கு இஸ்லாமிய தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதுடன் ஆங்காங்கே சில வன்முறைகளும் நடந்திருக்கின்றன.

இவற்றை சீனா இரும்புக் கரத்துடன் அடக்க முயன்றாலும், மத்திய ஆசியா, மத்திய கிழக்கு வழியாக தீவிரவாதம் தனது நாட்டுக்குள்ளேயும் நுழைந்து விடுமோ என்று சீனா கவலை கொண்டுள்ளது.

எனவே தீவிரவாத முறியடிப்புக் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருகிறது.

அதனால் தான், விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதில் வெற்றிகண்ட இலங்கைப் படைகளின் அனுபவங்களைப் பெற்றுக் கொள்வது மற்றும் இலங்கைப் படைகளுடன் இணைந்து போர்ப்பயிற்சிகளில் ஈடுபடுவதில் சீனா ஆர்வம் காட்டி வருகிறது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கூட இந்த விடயத்தில் குறியாகவே இருக்கின்றன என்பது உண்மை.

பட்டுப்பாதை ஒத்துழைப்பு 2015 என்ற பெயரில் சீனாவில் நடத்தப்பட்டுள்ள இருபது நாள் போர்ப்பயிற்சிலும் கூட தீவிரவாத முறியடிப்பு குறித்த பயிற்சிகளே இடம்பெற்றுள்ளன. இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 32 பேரும், சீனாவின் மக்கள் ஆயுத பொலிஸ் படையைச் சேர்ந்த 40 பேருமாக மொத்தம் 72 பேர் இந்தப் போர்ப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ், இந்தப் புதிய போர்ப்பயிற்சியின் முதற்கட்டம் கடந்த மார்ச் மாதம் 29ம் திகதி சீனாவின் தென்பகுதியில் உள்ள குவாங்சோ இராணுவ பயிற்சித் தளத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த 17ம் திகதியுடன் இந்தப் போர்ப்பயிற்சிகள் நிறைவடைந்தன.

இருநாட்டுப் படைகளும் தத்தமது போராற்றலைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கில் குறிப்பாக தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தமது திறனை அதிகரித்துக் கொள்வதற்கே இந்தப் போர்ப்பயிற்சியை மேற்கொண்டன.

ஒரு தரப்பிடம் இருந்து மற்றத் தரப்பு கற்றுக் கொளவதற்கும், தீவிரவாதம் முறியடிப்பில் தமது ஆற்றலை அதிகரித்துக் கொள்வதற்கும் இந்தப் போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக சீனாவின் பாதுகாப்பு இணையத்தளமான சைனா மிலிட்டரி ஒன்லைன் தெரிவித்திருந்தது.

மார்ச் 29ம் நாள் ஆரம்பிக்கப்பட்ட முதற்கட்டப பயிற்சியின் போது, முன்னேற்றமடைந்துள்ள நவீன தீவிரவாத எதிர்ப்புச் செயற்பாடுகள் மற்றுத் தந்திரோபாய பயிற்சிகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

தீவிரவாத எதிர்ப்பு ஒத்திகையின் போது சுடுதல், கைப்பற்றுதல், ஏறுதல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

தந்திரோபாய பயிற்சிகளில், பிரதானமாக கட்டிடங்களில் தேடுதல் நடத்துதல், பணயக் கைதிகள் மீட்பு விமான, பஸ் கடத்தல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை ஆகியன உள்ளடக்கப்பட்டிருந்ததாக சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பயிற்சித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சூ ஹய்ஹூய் தெரிவித்திருந்தார்.

சீன – இலங்கைப் படைகளுக்கு இடையிலான இந்தப் போர்ப்பயிற்சியின் இரண்டாவது கட்டம், வரும் ஜூன் மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக சீன இராணுவத்தின் பல விசேட நடவடிக்கைக் குழுக்கள் இலங்கைக்கு வரவுள்ளன.

இந்த இரண்டாவது கட்ட பட்டுப்பாதை ஒத்துழைப்பு 2015 போர்ப்பயிற்சியில் இலங்கை இராணுவத்தின் தாக்குதல் படைப்பிரிவுகள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் படைப்பிரிவுகள் பங்கேற்கவுள்ளன.

இவையே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கியமான பங்கை ஆற்றியிருந்தன.

இதற்கிடையே இந்தப் பேபர்ப்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு, முடியும் வரை, இதுபற்றிய தகவல்களை இலங்கை அரசாங்கமோ, இராணுவமோ வெளியில் மூச்சுக்கூட விடவில்லை.

தற்போதைய நிலையில் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி இலங்கை அரசாங்கம் இதனை மறைத்திருக்காது, அதற்கான அவசியமும் இல்லை.

அதேவேளை இன்றைய நவீன உலகில் போர்ப்பயிற்சிகள் என்பது, நேச நாடுகளுக்கு இடையில் மட்டுமன்றி, பகை நாடுகளுக்கு இடையில் கூட மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இலங்கை அரசாங்கம் இதனை மறைக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனாலும் மரைறக்க முயன்றுள்ளது. இது எங்கோ இலங்கைக்கு அழுத்தங்கள் உள்ளன என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

-சுபத்ரா

http://www.tamilwin.com

TAGS: