மே 18ல் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி நிகழ்வு வடக்கு மாகாண சபையினரால் நடத்தப்படும்!

health-ministerஇறுதி யுத்தத்தில் உயிர்நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

மாகாண சபையினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வடக்கு மாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு முதலமைச்சரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இம்முறை இறுதி யுத்தத்தில் உயிர்நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வருகின்ற 18ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு முள்ளிவாய்க்கால் அ.த.க பாடசாலைக்கருகில் நடாத்துவதற்கு மாகாண சபையினரால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது சர்வமத பிரார்த்தனைகளுடன் ஆரம்பமாகவுள்ளது. மும்மதங்களையும் சேர்ந்த மதத்தலைவர்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனையுடன் நிகழ்வுகள் நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து மௌன பிரார்த்தனையுடன் நிகழ்வை நடாத்துதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: