லிம் கிட் சியாங்; பாக்கத்தான் செத்து விட்டது!

 

Pakatan dead1பாஸ் கட்சி அதன் 61 ஆவது முக்தாமாரில் டிஎபியுடனான உறவை துண்டிக்கும் முன்மொழிதலை ஏற்றுக் கொண்டதுடன் பாக்கத்தான் மக்கள் கூட்டணி இறந்து விட்டது என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பிரகடனம் செய்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தாம் இன்னும் இரண்டு வாரத்திற்குப் பின்னர் பாக்கத்தான் ரக்யாட் இல்லாமல் போகலாம் என்று முன்னறிவுப்பு செய்திருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

தாம் தெரிவித்த முன்னறிவிப்பு இப்போது நடந்து விட்டது. இப்போது மீதம் இருப்பது ஈமக்கிரிகைதான் என்று கிட் சியாங் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

எவ்வித விவாதமும் இன்றி டிஎபியுடனான உறவை முறித்துக் கொண்டதாக பாஸ் அறிவித்த பின்னர், இன்னும் அது பாக்கத்தானில் இருப்பதாக அந்த இஸ்லாமிய கட்சி வினோதமான அறிவிப்பைச் செய்துள்ளது என்றாரவர்.DAP-Lim Kit siang

டிஎபியுடனான உறவை முறித்துக்கொள்ளும் தீர்மானத்தை அமல்படுத்துவதா என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் கட்சியின் மத்தியக் குழுவிடம் இருப்பதாக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உதவித் தலைவர் இட்ரீஸ் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், பாக்கத்தான் ஆதரவு பாஸ் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டப்பட்டுள்ளனர் என்று கூறிய கிட் சியாங், பாஸ் முக்தாமார் நிறை வேற்றிய தீர்மானத்துடன் மலேசிய அரசியல் ஒரு நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டதுடன் பல உடனடியான விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

இதன் விளைவாக, டிஎபி தலைமையிலான பினாங்கு அரசாங்கத்திலிருந்து பாஸ் பிரதிநிதிகள் விலக வேண்டும் என்பதோடு சிலாங்கூர் மாநிலத்தில் புதிய தேர்தல் நடத்த வேண்டிய சாத்தியமும் இருக்கிறது என்றாரவர்.

இது அம்னோவின் சூழ்ச்சிக்கு  கிடைத்த வெற்றியாகும் என்று கூறிய அவர், என்ன நடந்ததாலும் மத்திய அரசாங்கத்தில் மாற்றம் வேண்டும் என்ற போராட்டம் தொடரும் என்றார்.