மத்திய அரசை கண்ணை மூடிக்கொண்டு தான்தோன்றித்தனமாக ஆதரிப்பது தவறு என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் மாகாண மக்களின் அபிலாசைகளையும் தேவைகைகளையும் கருத்தில் கொண்ட அரசின் கொள்கைகளையே ஏற்க வேண்டும் என்றார். ஒன்பது மாகாண முதலமைச்சர்கள், ஆளுநர்கள், மாகாண அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதன்போதே வடக்கு முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒரே பாதணி எல்லோருக்கும் பொருந்தும் என்று எண்ணுவது மடமை. மாகாணசபைகளுக்குள்ளே வேற்றுமைகள் இருப்பதை கவனத்திற்கு எடுக்க வேண்டும் என்றும் கூறினார். வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் பாரிய அழிவை எதிர்நோக்கிய மாகாணங்கள் அவை. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பலத்த பாதிப்புக்குள்ளாகியவர்கள் இம்மாகாண மக்கள். இதை கருத்தில் எடுக்க வேண்டும் என்றார். இலங்கை -– இந்திய உடன்பாட்டின் நிமித்தம் தான் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. வடகிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைக்கு பிரத்தியேகமான ஒரு தீர்வைப் பெறுவதற்காகவே 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்றும் ஆனால் அன்றைய அரசு அனைத்து மாகாணகளுக்கும் பொதுவானதாக இதனை மாற்றியதையும் அவர் நினைவுபடுத்தினார்.
மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் இருக்கும் உறவுமுறை சந்தேகத்திற்கிடமின்றி நிர்ணயப்படுத்தப்படல் வேண்டும். மாகாண சபைகளின் தேவைகளை முன்வைத்து அதேநேரம் நாட்டினது தேவைகளையும் மனதில் எடுத்து கொள்கைகள். உருவாக்கப்பட வேண்டும் என்று விக்கினேஸ்வரன் கூறினார். இவ்வாறு உருவாக்கும் போது கீழிருந்து மேல்நோக்கி எமது திட்டமைப்பு நடைபெறவேண்டும். இப்பொழுது மேலிருந்து கீழ் நோக்கி திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அதைத் தவிர்க்க வேண்டும்என்றார் மாகாண மக்களினுடைய தேவைகளையும் அபிலாஷைகளையும் மனதிற்கு எடுத்து மத்திய அரசாங்கம் கொள்கைகளை வகுக்கவேண்டுமேயொழிய தான்தோன்றித்தனமாக மத்திய அரசாங்கத்தினுடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வடக்கு முதல்வரின் பேச்சை கூர்ந்து கவனித்திருந்தனர். விக்கினேஸ்வரனின் பேச்சு ஏனைய மாகாண முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களின் கவனத்தை ஈர்த்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
-http://www.athirvu.com


























முதலமைச்சரே! எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசி இருக்கிறீர்கள்! ஓடி ஒளியவில்லை! தமிழனாகவே இருக்கிறீர்கள். வாழ்த்துகள்!