எமது மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு விடிவை நோக்கிச் செல்லுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை மக்கள் ஆணையாகத்தர வேண்டும்

Selvam_Adaikalanathanதமிழ் தேசியக்கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் நாளை(10) வெள்ளிக்கிழமை மதியம் வேட்பு மனுத்தாக்கலை ஒன்றாக மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் இடம் பெற்று வருகின்றது.

எமது மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு விடிவை நோக்கிச் செல்லுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை மக்கள் ஆணையாகத்தர வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாக உள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வருகின்ற அரசாங்கம் உண்மையிலே இழுபறி அரசாங்கமாக வர இருக்கின்றது.

அந்த வகையிலே தமிழ் தேசியக்கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களை கைப்பற்றுகின்ற போது இந்த அரசாங்கத்தை நிபந்தனையின் அடிப்படையிலே செயலாற்றுவதற்கான வழியை நாங்கள் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

அந்த வகையில் எமது இனப்பிரச்சினைக்கான தீர்வு தீர்க்கப்படுவதற்கான அந்த சூழலும், சிறையில் உள்ள எமது இளைஞர், யுவதிகளின் விடுதலையும், காணாமல் போனவர்களின் பிரச்சினை, சொந்த நிலங்களில் எமது மக்கள் வாழ்வதற்கான உரித்தை பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பினையும், எங்களுடைய கடலையும் விவசாய நிலங்களையும் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள், இராணுவத்தை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் போன்ற முக்கிய விடயங்களை புதிய அரசாக வர இருக்கின்ற இந்த அரசிற்கு நிபந்தனையின் அடிப்படையிலே அதை உடனடியாக செய்கின்ற போது இந்த அரசாங்கத்திற்கு எந்தளவிற்கு ஆதரவு கொடுக்கின்றது என்பதனை பற்றி யோசிக்க முடியும்.

அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை உடனடியாக ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.

-tamilcnnlk.com

TAGS: