இலங்கையில் ஆண்ட இனம் அழியலாமா?

Pokkanai_23409_107வரலாற்றில் முதல், இடைத் தமிழ்ச் சங்கங்கள், கபாடபுரம், லெமூரியா கண்டம் அழிந்துவிட்டன என்றும், அதன் எச்சமாக தற்போது இலங்கைத் தீவு உள்ளது எனவும் எனவே இலங்கைத் தீவு தமிழ் மண்தான் என்றும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே யாழ்ப்பாண தமிழ் அரசுகள் அங்கு சேது நாணயம், நந்திக் கொடி கொண்டு சிறப்பாக ஆட்சி நடத்தின என்பது வரலாற்று உண்மை.

கலிங்கப் போருக்குப் பின் அசோகர் பௌத்த மதத்தைத் தழுவினார். மகேந்திரன் தலைமையில் பௌத்த குழுவை இலங்கைக்கு அனுப்பினார். அனுராதபுரத்தில், தேவநம்பிய தீசன் என்ற மன்னன் ஆட்சியில் மகேந்திரர் குழு அங்கு பௌத்த போதனைகளைப் போதித்த பின் பௌத்த மதம் அங்கு வந்தது என்று கூறப்படுகின்றது.

அதற்கு முன்பே அங்கு தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதுதான் வரலாற்று உண்மை. இப்படியெல்லாம் ஆண்ட தமிழ் இனம் இன்று இனப்பாகுபாடு காரணமாக ஒரு இன அழிவில் உள்ளது.இது தடுக்கப்;பட வேண்டும்.

போர்த்துக்கீசர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் ஆட்சிகள் முடிவுக்கு வந்த பின் தமிழர்களின் பூர்வீகக் குடியின் அடையாளங்களைத் திட்டமிட்டு ஒதுக்கி சிங்கள ஆட்சிகள் தமிழின அழிப்பு வேலைகளில் இறங்கின.

இலங்கையில் 1948ல் ஆங்கிலேயர் வெளியேறிய பின் 1949 ல் குடியுரிமைச் சட்டம், 1956ல் தனிச் சிங்களச் சட்டம், 1972ல் அரச மதவாதச் சட்டம் எனக் கொடிய சட்டங்களைக் கொண்டு வந்து சிங்கள அரசு தமிழுக்கு எதிராக நடந்து கொண்டது.

தமிழர்கள் சிங்கள அரசுக்கு எதிராக போராடினரே தவிர, தனிப்பட்ட சிங்களவரை எதிர்த்துப் போராடவில்லை. ஆனால், சிங்களத்தவர்களோ தமிழர்களை விரோதிகளாகக் கருதினர். தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்றுதான் போராடினார்கள் என்பதுதான் உண்மை.

இனம், நிறம், மொழி, மதம், கலாசாரம், பழக்க வழக்கங்கள், அரசியல் நிலைப்பாடுகள், தாய் மண், பிறப்பு என்ற நிலையில் உரிமைகளைப் பெற ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பிரகடனம் 1948ல் நடைமுறைக்கு வந்தது. மேற்குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்டுதான் தேசிய இனங்கள் வகுக்கப்படுகின்றன.

அந்நிலையில் ஈழத்தில் வாழும் தமிழர்களும் ஓர் இனம். 1990ம் ஆண்டுக்குப் பின்பு வரை உலகளவில் 23 தேசிய இனங்கள் பிரிந்து தங்களுக்கான அரசுகளை அமைத்துக் கொண்டுள்ளன. இவை பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தன்னாட்சி சுய உரிமை உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியாயங்கள் ஆகும். 1775ல் நடைபெற்ற அமெரிக்க விடுதலைப் போரும், 1789ல் ஏற்பட்ட பிரஞ்சுப் புரட்சியும் இன்றைக்கும் வரலாற்றில் பேசப்படுகின்றன.

இப்போராட்டங்கள் யாவும் தன்னாட்சி உரிமைக்கு வித்திட்டiவாகும். ஆதிக்கம், அடிமைத்தனம், பாசிசம் என்ற நிலையில் இன வேற்றுமையை பார்க்கும் போது புரட்சி, சுய நிர்ணயம், விடுதலை என்ற தாகம் ஏற்படுகிறது.

இங்கிலாந்திலிருந்து அயர்லாந்தும், ரஷ்யாவிலிருந்து போலந்தும், பின்லாந்தும், சுவீடனிலிருந்து நோர்வேயும் தன்னாட்சி உரிமை பெற்றதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு தேசிய இனம் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்டி வெற்றி பெறும் பொழுதுதான் அங்கு ஜனநாயகமும், மக்கள் ஆட்சியும் மலரும்.

உலக அளவில் இதுபோன்று தேசிய இனங்கள் பிரிந்து பல தனி நாடுகள் தோன்றியுள்ளன. வங்கதேசம், செக்கோஸ்லோவேகியாவிலிருந்து செக்ஸ்லோவிய என இரு நாடுகளும், யூகோஸ்லாவியாவிலிருந்து போர்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா, செர்பியா, குரோசியா, மாண்டனெக்ரே, மாசிடோனியா, சலவேனியா என ஆறு நாடுகள் தங்களது தேசிய இனத்தின் பிரச்சினைகளைக் கொண்டு சுய நிர்ணய உரிமைகளை நிலைநாட்டின.

அதேபோல கொசோவா போராட்டம், 27 ஆண்டுகள் நடைபெற்று தனி நாடாகியது. அல்பேனியா எழுச்சியும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. கிழக்கு தீமோரும் தங்கள் தேசிய இனப் போராட்டத்தில் வெற்றி கொண்டு தங்களின் இறையாண்மையை நிலைநாட்டியது.

தெற்கு சூடான் இறுதியாக தனிநாடாக பிரிந்துள்ளது.பலஸ்தீனப் போராட்டம் இன்னும் உலக மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீனப் போராட்டத்தையும் பலஸ்தீனத்தையும் பிரான்ஸ் ஏற்றுக் கொண்டுள்ளது.

இவ்வாறு உலகில் பல இனங்கள் தங்களது தேசிய இனத்தைத் தற்காத்துக் கொள்வதற்காக போராடி வெற்றி கண்டுள்ளன. அதே பாதையில்தான் இலங்கையிலும் தமிழ் இன மக்கள் போராடி வருகின்றனர். கடந்கால துன்பியல் பிரச்சினைகளைக் கொண்டு தொடர்ந்து ஈழப் பிரச்சினை தீண்டப்படாத பிரச்சினை என நினைப்பது மனித நாகரீகத்துக்கும் இயற்கையின் நீதிக்கும் புறம்பானது ஆகும்.

இந்திய மக்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் தெரியாமலே இந்திய அரசு இலங்கை வாழ் தமிழர்களைக் கொல்ல அனைத்து உதவிகளைச் செய்வது மட்டுமல்லாமல்,அந்த மக்கள் கொடுக்கும் வரிப் பணத்தின் மூலம் பாகிஸ்தானிலிருந்து ஆயுதம் வாங்க அப்போதைய மஹிந்த அரசுக்கு கடன் கொடுப்பதில் என்ன நியாயம் உள்ளது?

இலங்கையில் ஆளும் சு.க. ஐ.தே.க. எப்போதும் கீரியும் பாம்புமாக இருந்த கட்சிகள் இப்போது தேசிய அரசு என்று ஒட்டு மொத்;தச் சிங்களமும் சேர்ந்து விட்டது. இப்படி துக்ளக் தர்பார் இலங்கையில் நடக்கிறது.

தமிழ்க் கலாச்சாரச் சுவடுகளையே அரசின் கூலிகள் அகற்றி வருகிறது. வடக்கின் தமிழர் நாகரீகத்தைப் பற்றிய இந்திய – இலங்கைத் தொடர்பு, இங்குள்ள தமிழர் நாகரீகத்தைப் பற்றிய அகழ்வாராய்ச்சி சான்றுகள், செப்பேடுகள், பெருவழுதியின் சங்க கால நாணயங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன.

காரைநகர் கந்தரோடை, அனுராதபுரம் என்று பரவலாக இலங்கையில் உள்ள 26 இடங்களில் தமிழ்க் கலாச்சார நாகரீகம் புழங்கிய அடையாளங்கள் யாவும் அழிக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் வருகின்றன.

இதற்குக் காரணம் என்னவெனில், தமிழன் அங்கு பூர்வீகக் குடிமகன் என்று சொல்லக்கூடாது. அதற்கான அடையாளங்கள் கண்ணில் படக்கூடாது. என்று முந்திய ராஜபக்ஷ அரசு திட்டமிட்டு அழித்து வந்தது.

இந்திய அரசு இலங்கை இராணுவத்திற்கு உதவுவதற்காக, 225 இராணுவ அதிகாரிகளை இங்கே அனுப்பியது. நவீன ராடர்களும், ரூபா 400 கோடி கடனும் கொடுத்து உதவுவது யாரைக் கொல்ல? இதுவரை சிங்கள இராணுவத்தினர் 65,390 பேருக்கு இந்தியா பயிற்சி அளித்துள்ளது என்று கூறப்படுகின்றது.

இங்கு ஒரு தேசிய இனம் தனது உரிமைக்காகப் போராடுகிறது. சிங்களப் பேரினவாதம் இனப்படுகொலையைத் திட்டமிட்டுச் செய்து வருகிறது. அதைக் கண்டிக்காமல் இலங்கைக்கு இந்தியா உதவுவது கொடுமையிலும் கொடுமை. இதில் உள்ள நியாயங்களை எடுத்துச் சொன்னால் புலிகளுக்கு ஆதரவு என்று ஒரு தவறான வாதம் வைக்கப்படுகிறது.

1948ல் இலங்கை விடுதலை பெறும்போது ஈழத் தமிழர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். இந்தியாவில் முஸ்லிம்கள் பாகிஸ்தானை கேட்டது போலத் தமிழர்களும் கேட்டிருந்தால் அப்போதே தனி ஈழம் உருவாகியிருக்கும். ஆனால், தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ விரும்பினர். அதுதான் அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு.சிங்களவர்களை நம்பி ஈழத் தமிழர்கள் ஏமாந்து விட்டார்கள்.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா தலையிட்டது எப்படி? அதில் என்ன நியாயம் இருந்தது? இவையெல்லாம் தெரிந்திருந்தும் இந்திய அரசு பாராமுகமாக இருப்பது மட்டுமல்லாமல், இலங்கை அரசின் இனப்படுகொலைக்குத் துணை போகிறதே.

ஈழத் தமிழர்களுக்கு மத்தளத்தில் இரண்டு பக்கம் போன்று சிங்கள அரசு இவர்களை இந்தியாவின் கைக்கூலிகள் என்றும், இந்திய அரசோ இவர்களைத் தீவிரவாதிகள் என்றும் கைகோர்த்துக் கொண்டு அழிக்க முற்பட்டிருப்பதுதான் வேதனையிலும் வேதனை. இதன் விளைவாக ஒரு இனமல்லவா அழிக்கப்படுகிறது? அகிம்சையை உலகுக்குப் போதித்த பாரத பூமி ஒரு இனப்படுகொலைக்காக துணை நிற்பது?

எப்படி வங்கதேசம் தங்களுடைய உரிமைகளைப் பெற தனி நாடு கண்டதோ அதே போன்று ஈழத் தமிழர்கள் தங்களது பூர்வீக மண்ணில் தங்களுடைய இறையாண்மையை நிலைநாட்டப் போராடுகின்றனர்.

அவர்களுக்கு உதவுவதை விட்டுவிட்டுக் கண்ணைக் கட்டிக் கொண்டு காரணம் இல்லாமல் ஈழத்தில் வாழும் தமிழர்களை அழிக்க இந்திய அரசு சிங்களவர்களுக்குத் துணை போவதை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது.

பல நூற்றாண்டுளுக்கு முன்னர் வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் சிங்களவர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்றும், 1500 பௌத்த ஆலயங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக கடந்த வருடம் ஹெல உறுமய கட்சி எம்பி ஒருவர் கூறியிருந்தார். அப்படியானால், 1500 பௌத்த சிலைகள் வடக்கில் மண்ணிற்குள் புதைக்கப்படவுள்ளது.

அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில் 1500 பௌத்த சிலைகளும் தோண்டி எடுக்கப்பட்டு குடியேற்றப்படவிருந்தார்கள்.

கடந்த 4 வருடங்களாக இந்தியா இலங்கையை பிணை எடுப்பதும் காப்பாற்றுவதும் இந்தியா செய்யும் துரோகமில்லையா.ஒரு ராஜீவ் காந்திக்காக இத்தனை ஈழத் தமிழனின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டும் நரபலி கொடுக்கப்பட்டும் இந்தியாவின் வெறி இன்னுமா அடங்கவில்லை.

சிறுவர்கள், முதியோர்கள், இளசுகள், நடுத்தரம் என்றும் வயது வித்தியாசமின்றி ஆண்கள் பெண்கள் என்று இந்திய இராணுவம் தொட்டு இலங்கை இராணுவம் வரை சுமார் 3 லட்சம் அப்பாவி மக்களின் ஏராளமான நரபலி கொடுக்கப்பட்டுள்ளது.அடங்கவில்லை இந்தியாவின் ஆத்திரம்.ஓயவில்லை கேரளா அதிகாரிகளின் கொலை வெறி.

அதனால்தான் இப்போது அமெரிக்கா கொண்டு வந்துள்ள ஜெனீவாப் பிரேரணையில் இந்தியா காய் நகர்த்தி நுணுக்கமான முறையில் கலப்பு விசாரணை நீதிமன்றம் என்ற பதத்தை மாற்றி சர்வதேச சபை என்றும் அணிசேரா நாடுகளின் நீதிபதிகள் என்றும் தில்லாலங்கடி வேலைகளை இந்தியா செய்துள்ளது.

இப்போது அணிசேரா நாடுகளின் செயலாளர் நாயம் கமலேஷ் சர்மா (இந்தியர்) மூலமாக ஜெனீவா விசாரணையை ஒரு உப்புச் சப்பிலாமல் செய்வதே இந்தியாவின் முழு நோக்கமாக உள்ளது.

பாருங்கள் இந்தியாவும் பாகிஸ்தானும் பரம எதிரி நாடுகளாம். ஆனால் ஈழத்தமிழனுக்கு அநியாயம் செய்ய ஈழத் தமிழனை எட்டி உதைக்க இரு நாடுகளும் ஜெனீவாவில் மட்டும் நேசநாடு.கைகோர்த்த நாடு. வேட்கமாக இருக்கிறது.

இரண்டு நாடுகளும் அணுதுண்டுத் தாக்குலுக்குத் தயாராகும் மிகவும் மோசமான எதிரி நாடுகள்.ஆனால் இரண்டு நாடுகளும் இணைந்து ஈழத் தமிழனுக்கு எதிராகச் செயல்படுவோம்.இது எந்த ஊர் நியாயம்.

அணிசேரா நாடுகள் என்ற போர்வையில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆதரவு கொண்ட நாடுகளின் நீதிபதிகளைக் கொண்டு இந்த ஜெனீவா விசாரணை மழுங்கடிக்கப்படும். ஒன்றரை ஆண்டு காலம் இலங்கை கோரியுள்ளது இந்த 36 மாதங்களுக்குள் இந்தியா மறைமுகமாக தனது நாட்டாமைத் தன்மையைக் காட்டும்..

எம்.எம்.நிலாம்டீன்.
[email protected]

-http://www.tamilwin.com

TAGS: