ஐ.நா. தீர்மானம், தர்மத்தின் கல்லறை மீது நிறைவேற்றப்பட்டது!

SRI_LANKA warcrimesஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் இணை அனுசரனையுடன் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானமானது நீதியைப் படுகொலை செய்து மானுட தர்மத்தை குழிதோண்டிப் புதைத்து அந்தக் கல்லறை மீதே நிறைவேற்றப்பட்டுள்ளது என வன்மையாக சாடுகிறது  அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.  அதன் அறிக்கை வருமாறு.

சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மூலமே நடந்துள்ள குற்றங்களுக்கு உரிய தீர்வினைக்காண முடியுமென்று, பெருமதிப்புக்குரிய வடமாகாண முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களும், மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களும், உலகத்தமிழர்களின் சார்பாகவே தீர்மனங்களை நிறைவேற்றியிருந்தார்கள்.

இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு நீதியை எதிர்நோக்கியிருக்கும் தமிழர் தரப்பின் அதிகார மன்றங்களாக விளங்கும் வட மாகாண சபை, தமிழ்நாடு சட்டமன்றம் ஆகியவற்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் சர்வதேச சமூகத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளைப் புறக்கணித்து இனப்படுகொலைக் குற்றத்தில் ஈடுபட்ட சிறிலங்க அரசின் விருப்பத்திற்கேற்ப வலுவற்ற தீர்மானம் ஒன்றை கொண்டுவந்துள்ளமையானது சர்வதேச சமூகத்தின் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையை சிதறடிக்கச் செய்துள்ளது.
வாக்குமூலங்கள், சமர்ப்பிப்புக்கள் மற்றும் வெளியிடப்படாத அறிக்கைகளின் அடிப்படையில் பெறப்பட்ட, நேரடிச் சாட்சியங்கள், பாதிக்கப்பட்டோர் மற்றும் வேறு சாட்சியங்களோடு நடத்தப்பட்ட நேர்காணல்கள், இராணுவ மற்றும் தடயவியல் நிபுணர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட ஒளிப்பதிவுகள், புகைப்படங்கள், செய்மதிப் புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் ஆகியவற்றை பரிசீலனை செய்து அதனடிப்படையில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் சமர்பித்த விசாரணை அறிக்கை, உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்வாய்ப்பினை ஏற்படுத்தியிருந்த போதிலும் அதனை கருத்திலெடுக்காது சிறிலங்கா அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் ஒரேநோக்கில் இத்தீர்மானம் நிறவேற்றப்பட்டுள்ளது.

தமிழினப்படுகொலை தொடர்வதற்கு எந்த அரசியலமைப்பு வழிகாட்டுதலாக இருக்கிறதோ அந்த அரசியலமைப்பிற்குட்பட்டு நீதி விசாரணை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும், குற்றத்திற்கு காரணமானவர்களின் தலைமையிலே விசாரணைகள் நடத்தப்படும் எனவும், சர்வதேச நாடுகள் ஏகமனதாக தீர்மானித்துள்ள செயற்பாடானது நீதியின் மாண்புகளை கேலிக்குள்ளாக்கியுள்ளது.

சர்சதேச விசாரணை மேற்கொள்ளுமளவிற்கு பாரதூரமான குற்றச்செயல்கள் நடைபெற்றுள்ளமைக்கு, உள்நாட்டில் எமக்கு நீதி மறுக்கப்பட்டமையே காரணமாகும். இந்நிலையில், சர்வதேச சமூகமும் எம்மை வஞ்சிப்பது போன்ற நிலையை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளது.

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு ஒப்பானது என்பதைப் புரிந்து நீதி மறுக்கும் செயற்பாடுகளை கைவிட்டு உரிய நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான முன்முயற்சிகளை எடுப்பதற்கு சர்வதேச சமூகம் தாமதமின்றி முன்வரவேண்டும்.