பட்ஜெட் வாக்களிப்பு பாஸ் ஜிஎஸ்டியை ஆதரிப்பதைக் காண்பிக்கிறது

engநேற்று  பட்ஜெட்டை  நிராகரிக்கும்  முயற்சியில்  எதிரணி  தோற்றுப்போனது  பற்றி  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்கின்  ருத்தைக்  கேட்டதற்கு, “முயற்சியே  செய்யாமலிருப்பதை விட  முயன்று  தோல்வியடைவது  மேல்”  என்றார்.

“நாங்கள்  வெற்றிபெறவில்லைதான்.  ஆனால், பட்ஜெட்டைப்  பொருத்தவரை நஜிப்  பாஸின்  ஆதரவைப்  பெற்றிருக்கிறார்  என்பதைக் காண்பிக்கிறது”, என  லிம்  பினாங்கில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

பட்ஜெட்  மக்களுக்கு  நன்மை  அளிக்கிறது  என்பதால்  பாஸ்  அதை  ஆதரிப்பதாக  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  கூறியதை  லிம்  சுட்டிக்காட்டினார்.

“மக்கள்  பொருள், சேவை  வரியால் (ஜிஎஸ்டி) பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், ரிங்கிட்டின்  மதிப்புக்  குறைவதைத்  தடுக்கவும்  அதில்  நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பிறகு  அது  எவ்வகையில்  மக்களுக்கு  நன்மையாக  அமைகிறது  என்பது  எனக்குப்  புரியவில்லை”, என  லிம்  குறிப்பிட்டார்.

“ஹாடியின்  கூற்று  பாஸ்  ஜிஎஸ்டியையும்  பிஎன்  அரசாங்கத்தின்  நடப்புக்  கொள்கைகளையும்  ஆதரிப்பதைக்  காண்பிக்கிறது.

“மறைமுகமாக  1எம்டிபி  ஊழல்களும்  நஜிப்பின்  தனிப்பட்ட  வங்கிக்  கணக்கில்  ரிம2.6 பில்லியன்  நன்கொடை  செலுத்தப்பட்டதும்  பாஸுக்கு  ஏற்புடைய  செயல்களே  என்பதும்  புலனாகிறது”, என்றாரவர்.

ஆனாலும், பட்ஜெட்டை  ஆதரித்தோ  எதிர்த்தோ  வாக்களிப்பதில்லை  என்ற  கட்சியின்  முடிவையும்  மீறிச்  செயல்பட்டார்கள்  மூன்று  பாஸ்  எம்பிகள்  என்று குறிப்பிட்ட  லிம், அவர்களை “வீரர்கள்”  எனப்  பாராட்டினார்.

பொக்கோக்  சேனா  எம்பி  மாபுஸ்  ஒமார்,  பாசிர்  பூத்தே  எம்பி  நிக்  மசியான்  நிக்  முகம்மட்,  குபாங்  கிரியான்  எம்பி  அஹ்மட்  பாய்ஹாகி அதிகுல்லா  ஆகியோரே  அம்மூவருமாவர்.