தமிழ் மக்களின் போராட்டங்களை புரிந்து கொள்ளாதவரை நல்லாட்சி மலராது: யோகேஸ்வரன்

yokeshvaran_nlladதமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை பெரும்பான்மை மக்கள் புரிந்துகொள்ளாதவரை இந்த நாட்டிலே நல்லாட்சி மலராது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற விடயத்தில் இன மத கட்சி பேதமின்றி ஒருமித்து குரல்கொடுத்ததைப் போன்று இனப்பிரச்சினை தீர்வு விடயத்திலும் பெரும்பான்மை மற்றும் தமிழ் முஸ்லிம் தலைமைகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.

மட்டக்களப்பு உறுகாமம் சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

வித்தியாலய அதிபர் திருமதி.சகீலா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில்

“இந்த நாட்டிலே நல்லாட்சி நடைபெறவேண்டும் என்பதற்காக மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தோம். இலங்கைத் தீவிலே தமிழ் மக்கள் நீண்ட காலமாக பிரச்சினையை எதிர்நோக்குகிறார்கள் என்பதை கடந்த கால ஆட்சியாளர்கள் முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கமும் உணர்ந்துகொள்ளவில்லை என்பதை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அவர்களின் நழுவல் போக்கிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற விடயத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஜேவிபி போன்றவர்களும் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் கட்சி பேதங்களை மறந்து ஒரிமித்து குரல்கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

கைதிகளின் விடுதலை தொடர்பில் ஏற்பட்ட ஒற்றுமை தேசிய இனப்பிரச்சினை தீர்வு வியத்திலும் இருக்குமானால் எமது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் வெகுவிரைவில் பெற்றுகொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் 65 வருடங்களாக இனப்பிரச்சினையை எதிர் நோக்குகிறார்கள் என பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொண்டு பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்களை கண்டுபிடித்து முதலில் தீர்வுகாண  வேண்டும்.

இந்த நிலை ஏற்பட்டால் நாங்கள் சிங்களவர் தமிழர் முஸ்லிம் என்ற வேறுபாடுகளை மறந்து இலங்கையர் என்ற ஒற்றுமையுடன் வாழ முடியும். இந்த சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு நல்லாட்சி அரசாங்கத்திற்கு உள்ளது.

தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களது பிரச்சினைகளுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டத்தை வழங்க வேண்டும் என பெரும்பான்மை மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாதவரை இந்த நாட்டிலே நல்லாட்சி மலராது” என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: