இலங்கையில் இரகசிய சித்திரவதைக் கூடம் இல்லை: முன்னாள் கடற்படை தளபதி மறுப்பு

wasantha-kothabayaஇலங்கையில் இரகசிய சித்திரவதைக் கூடங்கள் செயற்பட்டதாக ஐ.நா. விசாரணைக் குழு குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதுபோன்ற இரகசிய சிறைகள் எதுவும் செயற்படவில்லை என்று அந்நாட்டுக் கடற்படையின் முன்னாள் தலைமை தளபதி வசந்த கரன்னகொட மறுத்துள்ளார்.

இலங்கையின் திருகோணமலை கடற்படை தளத்தில் பூமிக்கடியில் இரகசிய சிறைக்கூடம் ஒன்றை ஐ.நா. குழு கண்டறிந்துள்ளது.

இலங்கையில் இறுதிக்கட்ட போருக்கு பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் இங்கு விசாரணை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என்று அக்குழு தெரிவிக்கிறது.

ஐக்கிய நாடுகள் குழுவின் அறிக்கையை அடுத்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால் ஐ.நா குழுவின் குற்றச்சாட்டை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.

இதுதொடர்பாக, கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரன்னகொட அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

திருகோணமலை கடற்படைத் தளத்திலுள்ள இரகசிய அறைகள், இரண்டாம் உலகப் போரின் போது பதுங்கு குழிகளாக பயன்படுத்தப்பட்டவையாகும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து, இலங்கை இராணுவத்துக்கு உதவ முன்வந்தவர்களை தங்க வைப்பதற்கே அந்த அறைகளைப் பயன்படுத்தினோம்.

மற்றபடி, அங்கு இரகசிய சித்திரவதை கூடங்கள் எதுவும் செயல்படவில்லை. என்றார் வசந்தா கரன்னகொட.

இதனிடையே, அவரை கைது செய்து, விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: