இவ்வாண்டில் மட்டும் 110 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர்

journalist2015ஆம் ஆண்டில் இதுவரை, 110 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது.

அவ்வமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே, இவ்விடயம் தெரிவிக்க பட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டுள்ள 110 பேரில் 49 பேர், அவர்களது பணிக்காக அல்லது வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 18 பேர், அவர்களது பணியின்போது கொல்லப்பட்டுள்ளனர்.

மீதி 43 பேர், தெளிவற்ற காரணங்களால் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக, மக்கள் ஊடகவியலாளர்கள் 27 பேரும், ஊடகப் பணியாளர்கள் 7 பேரும், இவ்வாண்டில் கொல்லப்பட்டுள்ளனர்.

இதன்படி, 2005ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 787 ஊடகவியலாளர்கள், அவர்களது பணியுடன் தொடர்புபட்ட காரணங்களுக்காகக் கொல்லப்பட்டுள்ளனர் என அவ்வறிக்கை தெரிவிக்கிறது. இதில் குறிப்பிடதத்தக்கதாக, கடந்தாண்டு கொல்லப்பட்டவர்களில் மூன்றிலிரண்டு பேர், போர் வலயங்களில் சிக்கி மரணமடைந்திருந்தனர். ஆனால், இவ்வாண்டில் கொல்லப்பட்ட மூன்றிலரண்டு ஊடகவியலாளர்கள், சமாதானம் நிலவுகின்ற நாடுகள் எனத் தெரிவிக்கப்படும் நாடுகளிலேயே கொல்லப்பட்டுள்ளனர்.

அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நாடுகளாக, ஈராக், சிரியா ஆகியன காணப்படுகின்றன. இரு நாடுகளிலும் முறையே 11, 10 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவில் 9, பிரான்ஸில் 8, யேமனில் 8, மெக்ஸிக்கோவில் 8, தென் சூடானில் 7, பிலிப்பைன்ஸில் 7, ஹொன்டூரஸில் 7 என, இந்த எண்ணிக்கை நீள்கிறது. இந்தியாவில் கொல்லப்பட்ட 9 பேரில் 5 பேர், ஊடகவியல் பணிகளுக்காகக் கொல்லப்பட்டதோடு, 4 பேர், வெளிப்படுத்தப்படாத காரணங்களுக்காகக் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ஓர் ஊடகவியலாளரே உயிரிழந்துள்ளார். அவர், தனது ஊடகப் பயணத்தின்போது, யானையால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் தவிர, பங்களாதேஷில் கொல்லப்பட்ட பதிவர்கள் நால்வரை ஞாபகப்படுத்தும் அவ்வறிக்கை, கொல்லப்பட்டுள்ளவர்கள் தவிர, 54 ஊடகவியலாளர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள் எனவும், 153 ஊடகவியலாளர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கிறது.

-http://www.tamilwin.com