சீனாவுடனான விற்பனை கொள்முதல் ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும்

sales1எம்டிபி,  பண்டார்  மலேசியாவில்  60 விழுக்காடு  பங்குரிமையை  சீனாவுக்கு  விற்றது  தொடர்பில்  செய்துகொள்ளப்பட்ட   விற்பனை கொள்முதல்  ஒப்பந்தத்தைப்  பகிரங்கப்படுத்த  வேண்டும்  என  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா  வலியுறுத்தினார்.

“1எம்டிபி  ரியல்  எஸ்டேட்,  இஸ்கண்டர்  வாட்டர்ஃபுராண்ட்  ஹொல்டிங்ஸ்- சைனா  ரயில்வே  எஞ்சினியரிங்  கார்ப்பரேசன்(IWH-CREC)  கூட்டமைப்புடன்  செய்துகொண்ட  ஒப்பந்தம்  தொடர்பில்  குழப்பம்  ஏற்படாதிருக்க அதைப்  பகிரங்கப்படுத்த  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்கிறோம்”, என  புவா கூறினார்.

“பண்டார்  மலேசியாவின்  மொத்த  நிலத்தின்  பெறுமதி  ரிம12.35 பில்லியன்  என IWH-CREC  மதிப்பிட்டிருப்பதாக  1எம்டிபி  அறிவித்தது.  அதன்படி  பார்த்தால் அந்தக்  கூட்டமைப்பு  வாங்கியுள்ள  60 விழுக்காட்டு  நிலத்தின்  மதிப்பு  ரிம7.41 பில்லியன்”, என்றாரவர்.

அதே  வேளை,  சைனா  ரயில்வே  நிறுவனம்,  பண்டார்  மலேசியாவில்  60 விழுக்காட்டு  நிலத்தைப்  பெற  ரிம5.279 பில்லியன்  கொடுக்கப்படும்   என  ஹாங்காங்கில்   அறிவித்துள்ளது.

விலையில்  “பளிச்சென்று  தெரியும் இந்த  வேறுபாடு”  ஏன்? மார்க்கெட்டில்  எழுந்துள்ள  குழப்பத்தை  1எம்டிபி-தான்  தீர்க்க  வேண்டும்  என்று  புவா  கூறினார்.