தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாட்டை நிறுத்த விக்னேஸ்வரனுக்கு இந்தியா அழைப்பு ?

viknswaranஇனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இந்தியாவின் தலையீடு உள்ளது. குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும்தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று இந்திய பிரதமரை சந்திப்பது அல்லது இந்திய வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடுவது பின்னர் அந்த சந்திப்பு தொடர்பாக அதீத நம்பிக்கையுடன் ஊடகங்களுக்கு கருத்துச் சொல்வது வழமை. ஆனால் கடந்த ஒரு வருடமாக இந்தியா பற்றிய பேச்சுக்களை விட மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கைவைத்து பேசுகின்ற பண்பை காணமுடிகின்றது. அதுவும் இந்திய மத்திய அரசின் ஆசீர்வாதத்துடன்தான் என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கின்றார். மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் வைக்க முடியாத நம்பிக்கையை நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ்த்தரப்பு வைத்துள்ளமை ஸ்ரீலங்கா தேசியம் என்ற கட்டமைப்பை அவர்கள் ஏற்றிருக்கின்றனர் என்ற கருத்தின் அடிப்படையில் ஜனாதிபதியின் அந்த கூற்று அமைந்துள்ளதை காணமுடிகின்றது.இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணிய காலத்திலும் ஸ்ரீலங்கா அரசு அதன் ஒற்றையாட்சித் தன்மை என்ற கோட்பாட்டை ஏற்று அதன் மூலம் குறைந்தபட்ச அதிகாரபகிர்வை காணலாம் என்ற நம்பிக்கையுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி செயற்பட்டதையும் காணமுடிந்தது.

இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்ற ஆலோசனைகளை முன்வைப்பதற்காக இந்திய மத்திய அரசு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை புதுடில்லிக்கு அழைத்து பேசவுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 60 ஆண்டுகால அரசியல் போராட்டத்தில் சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்ற தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கு இந்திய மத்திய அரசுடன் நெருங்கிய தொடர்புகள் இருந்தன. அதுமாத்திரமல்ல இனப்பிரச்சினைக்கான தீர்வு எப்படி அமைய வேண்டும் என்ற கருத்துக்கள் கூட இந்திய மத்திய அரசினால் அவர்களுக்கு அன்று முதல் போதிக்கப்பட்டும் வந்தன.ஆனால் விடுதலைப் புலிகள் போராட்டம் நடத்திய அந்த 30 வருடகாலகத்தில் இந்திய அரசின் அந்த போதனைகளை தமிழ்த் தலைவர்களினால் செயற்படுத்த முடியாமல் போனது. இருந்தாலும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் அந்த போதனைகளை மீண்டும் செயற்படுத்தக்கூடிய வசதிகள் இந்திய மத்திய அரசுக்கும் அவர்களை அணுகிச் செல்லும் தமிழ்த் தரப்புக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது.

இந்த இடத்தில்தான் விக்னேஸ்வரன் விதிவிலக்காகிவிட்டார். ஆகவே இந்திய மத்திய அரசு அவரையும் அழைத்து போதனை செய்வதன் மூலம் ஸ்ரீலங்கா தேசியம் என்ற கட்டமைப்புக்குள் நின்று கொண்டும் அதன் ஒற்றையாட்சித் தன்மையை பாதுகாக்கும் வகையிலும் தீர்வை நோக்கி செல்லக்கூடிய சூழல் ஒன்றை உருவாக்கலாம் என தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள் நம்புகின்றனர்.தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதன் பின்னணியில் விக்னேஸ்வரனை இந்தியாவுக்கு அழைக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள சில மூத்த உறுப்பினர்கள் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்.இந்திய மத்திய அரசின் ஆசீர்வாதத்துடன் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மை ஆதரவுடன் செயற்படும் வடமாகாண சபை தேசியம் என்ற கருத்து நிலையில் இயங்கினால் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் குறிப்பாக புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் விடயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கருதியிருக்கலாம்.

ஏனெனில் இந்திய மத்திய அரசு உட்பட மிதவாத சிங்கள தலைவர்கள் என்று கூறப்படுகின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சந்திரிக்கா ஆகியோர் கூட தமிழ்த் தேசியம் சார்ந்து தீர்வை முன்வைக்க விரும்புவதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில் விக்னேஸ்வரனை அழைத்து பேசினால் பேரவையின் செயற்பாடுகளை நிறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டுடன் அவரை ஒத்துப்போகச் செய்வதன் மூலம் தமது புவிசார் அரசியலை முன்னெடுக்க வசதியாக அமையும் என்பதுடன் மைத்திபால சிறிசேன அரசாங்கத்தின் ஆயட்காலத்தையும் சிங்கள கடும்போக்குவாதிகளையும் திருப்திப்படுத்தலாம் என இந்தியா கருதியிருக்கலாம்.இந்திய மத்திய அரசின் இந்த நிலைப்பாடு இந்திராகாந்தி காலத்தில் இருந்து என்பதுதான் விமர்சகர்களின் கருத்து. ஏனெனில் இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஒத்த அல்லது இந்திய மாநில அதிகாரங்களையும் விட குறைவான அரசியல் தீர்வு ஒன்றையே அன்று இந்திரா காந்தி அன்று தீர்மானித்திருந்தார் என்பதற்கு வரலாறுகள் உண்டு.

இந்திரா காந்தி காலத்தில் அமிர்தலிங்கம் சம்பந்தன் போன்ற தமிழ்த் தலைவர்களுக்கு அரச கௌரவம் இந்தியாவில் கிடைத்து என்ற ஒரு செய்தியைத் தவிர வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அதிகார விடயத்தில் இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மைக்கு பங்கம் ஏற்படக் கூடாது என்பதில் இந்திரா காந்தியும் அவதானமாக இருந்தார் என்பதுதான் உண்மை எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

-http://www.athirvu.com

TAGS: